1 தீமோ 3 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்புதிருச்சபை மேற்பார்வையாளர்களின் பண்புகள் 1 நம்பத்தகுந்த கூற்று இது: எவராவது மேற்பார்வையாளராக இருக்க விரும்பினால், அவர் சிறந்த பணியை விரும்புகிறார். 2 எனவே மேற்பார்வையாளராக இருப்பவர் குற்றம் சாட்டப்படாதவராகவும், ஒரு மனைவியை மட்டும் உடைய கணவனாகவும், தன்னடக்கம் உள்ளவராகவும், சுயகட்டுப்பாடு உடையவராகவும், மதிப்புக்குரியவராகவும், உபசரிக்கின்ற குணமுள்ளவராகவும், போதிக்கும் ஆற்றல் உடையவராகவும் இருக்க வேண்டும். 3 அவர் குடிகாரராகவோ, மற்றவர்களைத் தாக்குகின்றவராகவோ இல்லாமல் கனிவு உடையவராகவும், வாக்குவாதம் செய்யாதவராகவும், பண ஆசை இல்லாதவராகவும் இருக்க வேண்டும். 4 தனது சொந்தக் குடும்பத்தை நல்ல முறையில் நடத்துகின்றவராகவும், அவரது பிள்ளைகள் எல்லாவிதத்திலும் அவருக்கு மதிப்பளித்து கீழ்ப்படிகின்றவர்களாக இருக்கும்படியும் பார்த்துக்கொள்ள வேண்டும். 5 ஒருவருக்குத் தனது சொந்தக் குடும்பத்தை நடத்துவது எப்படி எனத் தெரியவில்லை என்றால், இறைவனின் திருச்சபையை அவர் எப்படிப் பராமரிப்பார்? 6 அவர் புதிதாக மனமாற்றம் அடைந்த ஒரு விசுவாசியாய் இருக்கக் கூடாது. அப்படியிருந்தால், அவர் வீண்பெருமை கொண்டவராகி, பிசாசு அடைந்த நியாயத்தீர்ப்புக்குள் விழக் கூடும். 7 வெளியாட்களின் மத்தியிலும் அவர் நற்பெயர் பெற்றவராய் இருக்க வேண்டும். அப்போது அவர் அவதூறுக்கு ஆளாகாமலும், பிசாசின் கண்ணிப் பொறியில் விழாமலும் இருப்பார். 8 அதேபோல் உதவி ஊழியர்கள் மதிப்புக்கு உரியவர்களாகவும், உண்மைத் தன்மை உள்ளவர்களாகவும் இருக்க வேண்டும். அவர்கள் மதுவெறி கொள்கின்றவர்களாகவோ, அநியாய இலாபம் ஈட்ட முயற்சிக்கின்றவர்களாகவோ இருக்கக் கூடாது. 9 விசுவாசத்தின் ஆழமான மறைபொருளை நல்ல மனசாட்சியுடன் பற்றிப்பிடித்துக் கொண்டிருப்பவர்களாய் இருக்க வேண்டும். 10 முதலாவது அவர்களைப்பற்றி ஆராய்ந்தறியப்பட வேண்டும்; அதன்பின்பு, அவர்களுக்கு எதிராக குற்றம் ஏதும் இல்லையென்றால் அவர்கள் உதவி ஊழியர்களாகப் பணி செய்யலாம். 11 அதேபோல் அவர்களுடைய மனைவியரும், மதிப்புக்குரியவர்களாய் இருக்க வேண்டும். அவர்கள் அவதூறு பேசாதவர்களாகவும், தன்னடக்கம் உள்ளவர்களாகவும், எல்லாவற்றிலும் நம்பத் தகுந்தவர்களாகவும் இருக்க வேண்டும். 12 ஒரு உதவி ஊழியர், தன் மனைவிக்கு உண்மையுள்ள கணவனாகவும் தனது பிள்ளைகளையும் குடும்பத்தையும் நல்ல முறையில் நடத்துகின்றவராகவும் இருக்க வேண்டும். 13 நல்ல முறையில் இந்த பணியைச் செய்கின்றவர்கள் உயர் மதிப்பைப் பெற்றுக்கொள்வதோடு, கிறிஸ்து இயேசுவில் வைத்திருக்கின்ற தங்கள் விசுவாசத்தில் மிகுந்த உறுதி அடைவார்கள். பவுலின் அறிவுறுத்தல்களுக்கான காரணங்கள் 14 விரைவில் நான் உன்னிடம் வருவேன் என எதிர்பார்ப்போடு இருக்கின்றேன். ஆனாலும் நான் இந்த அறிவுறுத்தல்களை எழுதுகிறேன். 15 ஏனெனில் ஒருவேளை நான் வர தாமதித்தால், இறைவனுடைய குடும்பத்தில் உள்ளவர்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று நீ அறிந்துகொள்ளும்படியே இதை எழுதுகிறேன். இந்தக் குடும்பமே வாழும் இறைவனின் திருச்சபையாய் இருக்கின்றது. அதுவே சத்தியத்தைத் தாங்கும் தூணும் அத்திவாரமுமாய் இருக்கின்றது. 16 இறைபக்தியைக் குறித்த மறைபொருள் மகத்தானது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அவர் மனிதனாக வெளிப்படுத்தப்பட்டார். ஆவியானவரால் நிரூபிக்கப்பட்டார். இறைதூதர்களுக்குக் காணப்பட்டார். யூதரல்லாதவர்கள் மத்தியில் பிரசங்கிக்கப்பட்டார். உலகத்திலுள்ளவர்களால் விசுவாசிக்கப்பட்டார். அவர் மகிமையில் எடுத்துக்கொள்ளப்பட்டார். |
இலகு தமிழ் மொழிபெயர்ப்பு™ புதிய ஏற்பாடு
பதிப்புரிமை © 2002, 2022 Biblica, Inc.
அனுமதியுடன் பயன்படுத்தப்பட்டுள்ளது.
உலகளாவிய ரீதியில் முழு பதிப்புரிமையும் பாதுகாக்கப்பட்டவை.
Tamil Readerʼs Version™ New Testament
Copyright © 2002, 2022 by Biblica, Inc.
Used with permission.
All rights reserved worldwide.
Biblica, Inc.