Online Bible

- Reklamy -

சகரியா 6 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022


நான்கு தேர்கள்

1 திரும்பவும் நான் பார்த்தபோது, இரண்டு வெண்கல மலைகளுக்கு இடையிலிருந்து நான்கு தேர்கள் வெளியே வரக்கண்டேன்.

2 முதலாம் தேரில் சிவப்புக் குதிரைகளும், இரண்டாம் தேரில் கருப்புக் குதிரைகளும்,

3 மூன்றாம் தேரில் வெள்ளைக் குதிரைகளும், நான்காம் தேரில் புள்ளிகளுடைய குதிரைகளும் பூட்டப்பட்டிருந்தன. அவைகளெல்லாம் வலிமை நிறைந்தனவாய் இருந்தன.

4 அப்பொழுது நான் என்னுடன் பேசிக்கொண்டிருந்த தூதனிடம், “இவை என்ன ஐயா?” எனக் கேட்டேன்.

5 அதற்கு அந்தத் தூதன் என்னிடம், “இவை சர்வலோகத்திற்கும் ஆண்டவராக இருப்பவரின் முன்னின்று புறப்படுகிற வானத்தின் நான்கு காற்றுகளாகும்.

6 கருப்புக் குதிரைகள் பூட்டப்பட்டது வட தேசத்தை நோக்கியும், வெள்ளைக் குதிரைகள் பூட்டப்பட்டது மேற்கு நோக்கியும், புள்ளிகளுடைய குதிரைகள் பூட்டப்பட்டது தெற்கு நோக்கியும் போகின்றன.”

7 வலிமைவாய்ந்த குதிரைகள் வெளியே வந்து, அவை பூமியை சுற்றிப்போகத் துடித்துக் கொண்டிருந்தன. அப்போது அவன், “பூமி முழுவதையும் சுற்றிப் போங்கள்!” என்றான். உடனே அவை பூமி முழுவதையும் சுற்றிப்போனது.

8 அப்போது அவர் என்னைக் கூப்பிட்டு, “பார்! வட தேசத்தை நோக்கிப் போகின்றவை வடநாட்டில் என் ஆவிக்கு அமைதியைக் கொடுத்திருக்கின்றன என்றான்.”


யோசுவாவுக்கு மகுடம்

9 திரும்பவும் யெகோவாவின் வார்த்தை எனக்கு வந்தது.

10 “நாடுகடத்தப்பட்டு, பாபிலோனிலிருந்து திரும்பி வந்த எல்தாய், தொபியா, யெதாயா ஆகியோரிடமிருந்து வெள்ளியையும் தங்கத்தையும் பெற்றுக்கொள். அன்றைக்கே புறப்பட்டு செப்பனியாவின் மகன் யோசியாவின் வீட்டிற்குப் போ.

11 அங்கே வெள்ளியையும், தங்கத்தையும் எடுத்து ஒரு மகுடம் செய்து அதை யெகோசாதாக்கின் மகன் யோசுவா என்னும் தலைமை ஆசாரியனின் தலையில் வை.

12 சேனைகளின் யெகோவா அறிவிப்பது இதுவே என நீ அவனிடம் சொல்: ‘கிளை என்னும் பெயரைக்கொண்டவர் இவரே; அவர், தான் இருக்குமிடத்திலிருந்து கிளைவிட்டு யெகோவாவின் ஆலயத்தைக் கட்டுவார்.

13 யெகோவாவின் ஆலயத்தைக் கட்டுகிறவர் அவரே. அவர் மாட்சிமையை அணிந்து, தம் அரியணையின்மேல் அமர்ந்திருந்து அரசனாக ஆட்சி செய்வார். அவ்வாறு அவர் தம் அரியணையில் ஒரு ஆசாரியனாகவும் இருப்பார். இந்த இரண்டு பணிகளுக்கும் இடையே ஒரு நல்லிணக்கம் இருக்கும்.’

14 அந்த மகுடம் ஏலேம், தொபியா, யெதாயா ஆகியோருக்கும், செப்பனியாவின் மகன் யோசியா எனப்பட்ட ஏனுக்கும் நினைவுச் சின்னமாகக் கொடுக்கப்படும். அதை யெகோவாவின் ஆலயத்தில் வைத்திருக்கவேண்டும்.

15 வெகுதொலைவில் இருப்பவர்கள் வந்து, யெகோவாவின் ஆலயத்தைக் கட்ட உதவி செய்வார்கள்; அப்பொழுது என்னை சேனைகளின் யெகோவாவே உங்களிடம் அனுப்பினார் என்பதையும் நீங்கள் அறிந்துகொள்வீர்கள். உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கு முழுவதுமாய் கீழ்ப்படிவீர்களானால் இது நிறைவேறும் என்றார்.”

இந்திய சமகால தமிழ் மொழிபெயர்ப்பு™ பரிசுத்த வேதம்

பதிப்புரிமை © 2005, 2022 Biblica, Inc.

இஅனுமதியுடன் பயன்படுத்தப்படுகிறது.

உலகளாவிய முழு பதிப்புரிமை பாதுகாக்கப்பட்டவை.

Holy Bible, Indian Tamil Contemporary Version™

Copyright © 2005, 2022 by Biblica, Inc.

Used with permission.

Biblica, Inc.
Následuj nás:



Reklamy