Online Bible

- Reklamy -

சங்கீதம் 48 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022


சங்கீதம் 48
கோராகியரின் சங்கீதப் பாட்டு.

1 யெகோவா மிகவும் பெரியவர், நமது இறைவனுடைய நகரத்தில், அவருடைய பரிசுத்த மலையில் அவர் மிகவும் துதிக்கப்படத்தக்கவர்.

2 சீயோன் மலை தன் கம்பீரத்தில் அழகாய், முழு பூமியின் மகிழ்ச்சியாய் இருக்கிறது, வடதிசையின் மிக உயர்ந்த மேடுகளைப் போல இருக்கிற அது மகா அரசரின் நகரம்.

3 இறைவன் அதின் கோட்டைப் பட்டணங்களில் வீற்றிருந்து, அவர்தாமே அதின் கோட்டை எனக் காண்பிக்கிறார்.

4 அரசர்கள் படைதிரட்டி ஒருமித்து முன்னேறி வந்தபோது,

5 சீயோன் மலையைக் கண்டு அதிர்ச்சியடைந்து, திகிலடைந்து தப்பி ஓடினார்கள்.

6 அங்கே நடுக்கம் அவர்களைப் பிடித்தது; பிரசவிக்கும் பெண்ணுக்கு உண்டாகுவதைப் போன்ற வேதனை அவர்களைப் பிடித்தது.

7 யெகோவாவே, நீர் கிழக்குக் காற்றினால், தர்ஷீசின் கப்பல்களை உடைக்கிறீர்.

8 நாம் கேள்விப்பட்டது போலவே, சேனைகளின் இறைவனுடைய பட்டணத்தில், நம்முடைய யெகோவாவின் பட்டணத்தில் நாம் கண்டும் இருக்கிறோம்: இறைவன் அந்தப் பட்டணத்திற்கு என்றென்றைக்கும் பாதுகாப்பு கொடுக்கிறார்.

9 இறைவனே, உமது உடன்படிக்கையின் அன்பைக்குறித்து, உமது ஆலயத்தில் நாங்கள் தியானிக்கிறோம்.

10 இறைவனே, உமது பெயரைப் போலவே உமது துதியும் பூமியின் கடைசிவரை எட்டுகிறது; உமது வலதுகரம் நீதியால் நிறைந்திருக்கிறது.

11 உமது நியாயத்தீர்ப்பின் நிமித்தம் சீயோன் மலை களிகூருகிறது, யூதாவின் கிராமங்கள் மகிழ்கிறது.

12 சீயோனைச் சுற்றி உலாவுங்கள்; அதின் கோபுரங்களைக் கணக்கிடுங்கள்.

13 அவற்றைப்பற்றி அடுத்த தலைமுறைக்கு நீங்கள் சொல்லும்படி, அதின் காவல் அரண்களை நன்றாய் கவனியுங்கள்; கோட்டைப் பட்டணங்களைப் பார்வையிடுங்கள்.

14 ஏனெனில் இந்த இறைவனே என்றென்றும் நம்முடைய இறைவன்; மரணம் வரையும் அவரே நமக்கு வழிகாட்டியாய் இருப்பார்.

இந்திய சமகால தமிழ் மொழிபெயர்ப்பு™ பரிசுத்த வேதம்

பதிப்புரிமை © 2005, 2022 Biblica, Inc.

இஅனுமதியுடன் பயன்படுத்தப்படுகிறது.

உலகளாவிய முழு பதிப்புரிமை பாதுகாக்கப்பட்டவை.

Holy Bible, Indian Tamil Contemporary Version™

Copyright © 2005, 2022 by Biblica, Inc.

Used with permission.

Biblica, Inc.
Následuj nás:



Reklamy