Online Bible

- Reklamy -

லேவியராகமம் 1 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022


தகன காணிக்கை

1 யெகோவா சபைக் கூடாரத்திலிருந்து மோசேயைக் கூப்பிட்டு, அவனுடன் பேசினார்.

2 “நீ இஸ்ரயேலருடன் பேசிச் சொல்லவேண்டியதாவது: ‘உங்களில் யாராவது யெகோவாவுக்கு ஒரு காணிக்கையைக் கொண்டுவரும்போது, ஆட்டு மந்தையிலிருந்தோ, மாட்டு மந்தையிலிருந்தோ ஒரு மிருகத்தை உங்கள் காணிக்கையாகக் கொண்டுவாருங்கள்.

3 “ ‘அக்காணிக்கை மாட்டு மந்தையிலிருந்து கொடுக்கப்படும் தகன காணிக்கையானால், அவன் குறைபாடற்ற ஒரு காளையை காணிக்கையாகக் கொடுக்கவேண்டும். அது யெகோவாவினால் ஏற்றுக்கொள்ளப்படும்படி, அவன் அதைச் சபைக்கூடார வாசலில் கொண்டுவந்து ஒப்படைக்கவேண்டும்.

4 அவன் அந்த தகன காணிக்கை மிருகத்தின் தலையின்மேல் தன் கையை வைக்கவேண்டும். அது அவனுடைய பாவங்களை நிவிர்த்தி செய்வதற்கு அவன் சார்பில் ஏற்றுக்கொள்ளப்படும்.

5 யெகோவாவின் முன்னிலையில் அவன் அந்த இளங்காளையை வெட்டிக் கொல்லவேண்டும். ஆரோனின் மகன்களான ஆசாரியர்கள் அந்தக் காளையின் இரத்தத்தைக் கொண்டுவந்து, சபைக்கூடார வாசலில் இருக்கும் பலிபீடத்தின் எல்லா பக்கங்களிலும் தெளிக்கவேண்டும்.

6 பின்பு அந்தக் காணிக்கையைக் கொண்டுவந்தவன், தகன காணிக்கை மிருகத்தைத் தோலுரித்துத் துண்டுகளாக வெட்டவேண்டும்.

7 ஆரோனின் மகன்களான ஆசாரியர்கள், பலிபீடத்தின்மேல் நெருப்பை மூட்டி, அந்த நெருப்பின்மேல் விறகுகளை அடுக்கவேண்டும்.

8 அதன்பின் ஆரோனின் மகன்களான ஆசாரியர்கள் அந்தத் துண்டுகளை, தலையும் கொழுப்பும் உட்பட பலிபீடத்தில் எரிகின்ற விறகுகளின்மேல் அடுக்கவேண்டும்.

9 ஆகிலும், உள்ளுறுப்புகளையும், கால்களையும் காணிக்கையைக் கொண்டுவந்தவன் தண்ணீரால் கழுவவேண்டும். ஆசாரியர், அவையெல்லாவற்றையும் பலிபீடத்தின்மேல் எரித்துவிடவேண்டும். இது ஒரு தகன காணிக்கை. இது யெகோவாவுக்கு மகிழ்ச்சியூட்டும் நறுமணமாக, நெருப்பினால் செலுத்தப்படும் ஒரு காணிக்கை.

10 “ ‘அந்தக் காணிக்கை செம்மறியாட்டு மந்தையிலிருந்தோ, வெள்ளாட்டு மந்தையிலிருந்தோ எடுக்கப்படும் தகன காணிக்கையாக இருந்தால், அவன் குறைபாடற்ற ஒரு கடாவைச் செலுத்தவேண்டும்.

11 அவன் அதைப் பலிபீடத்தின் வடக்குப் பக்கத்தில் யெகோவாவுக்கு முன்பாக வெட்டிக் கொல்லவேண்டும். அதன் இரத்தத்தை ஆரோனின் மகன்களான ஆசாரியர்கள், பலிபீடத்தின் எல்லா பக்கங்களிலும் தெளிப்பார்கள்.

12 அவன் அதைத் துண்டுகளாக வெட்டவேண்டும். அந்தத் துண்டங்களை தலையும், கொழுப்பும் உட்பட பலிபீடத்தில் எரிகின்ற விறகுகளின்மேல் ஆசாரியர் அடுக்கவேண்டும்.

13 காணிக்கை கொண்டுவந்தவன் அதன் உள்ளுறுப்புகளையும், கால்களையும் தண்ணீரால் கழுவவேண்டும். ஆசாரியர் அவற்றையெல்லாம் கொண்டுவந்து, பலிபீடத்தின்மேல் எரிக்கவேண்டும். இது ஒரு தகன காணிக்கை; இது யெகோவாவுக்கு மகிழ்ச்சியூட்டும் நறுமணமாக, நெருப்பினால் செலுத்தப்படும் ஒரு காணிக்கை.

14 “ ‘யெகோவாவுக்கான தகன காணிக்கை பறவைகளானால், அவன் ஒரு புறாவையோ அல்லது ஒரு மாடப்புறாக் குஞ்சையோ செலுத்தவேண்டும்.

15 ஆசாரியர் அப்பறவையைப் பலிபீடத்திற்குக் கொண்டுவந்து, அதன் தலையைத் திருகி, அதைப் பலிபீடத்தில் எரிக்கவேண்டும். அதன் இரத்தம் பலிபீடத்தின் ஒரு பக்கத்தில் வடியவிடவேண்டும்.

16 அவன் அதன் இரைப்பையையும் அதற்குள் இருப்பதையும் அகற்றி, பலிபீடத்தின் கிழக்குப் பக்கத்தில் சாம்பல் இருக்கும் இடத்தில் எறியவேண்டும்.

17 அதன்பின் ஆசாரியர் அதை முற்றிலும் பிளக்காமல், சிறகுகளைப் பிடித்துக் கிழித்து, அதைப் பலிபீடத்தின் நெருப்பின் மேலுள்ள விறகுகளின்மேல் போட்டு எரிக்கவேண்டும். இது ஒரு தகன காணிக்கை, இது யெகோவாவுக்கு மகிழ்ச்சியூட்டும் நறுமணமாக, நெருப்பினால் செலுத்தப்படும் ஒரு காணிக்கை.

இந்திய சமகால தமிழ் மொழிபெயர்ப்பு™ பரிசுத்த வேதம்

பதிப்புரிமை © 2005, 2022 Biblica, Inc.

இஅனுமதியுடன் பயன்படுத்தப்படுகிறது.

உலகளாவிய முழு பதிப்புரிமை பாதுகாக்கப்பட்டவை.

Holy Bible, Indian Tamil Contemporary Version™

Copyright © 2005, 2022 by Biblica, Inc.

Used with permission.

Biblica, Inc.
Následuj nás:



Reklamy