Online Bible

- Reklamy -

சங்கீதம் 34 - பரிசுத்த பைபிள்


தாவீதின் வேஷத்தைக் கண்டு அபிமெலேக்கு அவனைத் துரத்தியபோது தாவீது பாடியது. இவ்வாறு தாவீது அவனை விட்டுப் பிரிந்தான்.

1 நான் எந்த காலத்திலும் கர்த்தரை ஸ்தோத்தரிப்பேன். என் உதடுகள் எப்போதும் அவரைத் துதிக்கும்.

2 தாழ்மையான ஜனங்களே, செவிக்கொடுத்து மகிழுங்கள். என் ஆத்துமா கர்த்தரைக் குறித்துப் பெருமைகொள்ளும்.

3 தேவனுடைய மேன்மையை எனக்குக் கூறுங்கள். அவரது நாமத்தை என்னோடு சேர்ந்து துதியுங்கள்.

4 உதவிவேண்டி தேவனிடம் போனேன். அவர் கேட்டார், நான் அஞ்சிய எல்லாக் காரியங்களிலிருந்தும் அவர் என்னை மீட்டார்.

5 உதவிக்காக தேவனை நாடுங்கள். அவர் உங்களை ஏற்றுக்கொள்ளுவார். வெட்க மடையாதீர்கள்.

6 இந்த ஏழை உதவிக்காக கர்த்தரைக் கூப்பிட்டான். கர்த்தர் எனக்குச் செவிகொடுத்தார். என் தொல்லைகளிலிருந்து என்னை மீட்டார்.

7 கர்த்தரை நம்புவோரைச் சுற்றிலும் கர்த்தருடைய தூதன் ஒரு பாளையமிடுகிறான். கர்த்தருடைய தூதன் அவர்களைக் காத்து அவர்களுடைய துன்பங்களிலிருந்து விடுதலை அளிக்கிறான்.

8 கர்த்தரை நல்லவர் என்று ருசித்து அறியுங்கள். கர்த்தரைச் சார்ந்து வாழும் மனிதன் உண்மையாகவே சந்தோஷமடைவான்.

9 கர்த்தருடைய பரிசுத்த ஜனங்கள் அவரைத் தொழுதுகொள்ளட்டும். கர்த்தரைப் பின்பற்றுவோருக்கு வேறெந்த அடைக்கலமும் தேவையில்லை.

10 வல்லமையுள்ள ஜனங்கள் சோர்ந்து பசியடைவார்கள். ஆனால் தேவனிடம் உதவி வேண்டிச் செல்வோர் நல்லவற்றையெல்லாம் அடைவார்கள்.

11 பிள்ளைகளே, எனக்குச் செவிகொடுங்கள். கர்த்தரை எப்படி மதிக்கவேண்டுமென்று உங்களுக்குப் போதிப்பேன்.

12 தன் வாழ்க்கையை நேசித்து, நீண்ட ஆயுளை விரும்பும்,

13 மனிதன் தீயவற்றைப் பேசக்கூடாது. அம்மனிதன் பொய் பேசக்கூடாது.

14 தீமை செய்வதை அவன் விட்டுவிட வேண்டும். நல்லவற்றைச் செய். சமாதானத்திற்காகப் பாடுபடு. அதை அடையும்வரை அதற்கென முயற்சி செய்.

15 நல்லோரை கர்த்தர் பாதுகாக்கிறார். அவர்கள் ஜெபங்களை அவர் கேட்கிறார்.

16 கர்த்தர் தீயோருக்கு எதிரானவராயிருந்து அவர்களை முற்றிலும் அழிக்கிறார்.

17 கர்த்தரிடம் ஜெபியுங்கள். அவர் உங்கள் விண்ணப்பங்களைக் கேட்பார். உங்கள் எல்லாத் தொல்லைகளிலிருந்தும் உங்களைக் காப்பார்.

18 சிலருக்குத் தொல்லைகள் மிகுதியாகும்பொழுது அவர்கள் பெருமையை விட்டொழிப்பர். கர்த்தர் அவர்களருகே இருந்து தாழ்மையான அந்த ஜனங்களைக் காக்கிறார்.

19 நல்லோருக்குத் தொல்லைகள் பல நேரிட்டாலும் அவர்கள் தொல்லைகளிலிருந்து கர்த்தர் அவர்களை மீட்பார்.

20 அவர்கள் எலும்புகளில் ஒன்றும் முறிந்து போகாதபடி கர்த்தர் அவற்றைப் பாதுகாப்பார்.

21 தீயோரைத் தொல்லைகள் கொல்லும். நல்லோரின் பகைவர்கள் அழிக்கப்படுவார்கள்.

22 தமது ஊழியர்களின் ஆத்துமாக்களை கர்த்தர் மீட்கிறார். அவரைச் சார்ந்திருக்கும் ஜனங்களை அழியவிடமாட்டார்.

Tamil Holy Bible: Easy-to-Read Version

All rights reserved.

© 1998 Bible League International

Bible League International
Následuj nás:



Reklamy