Online Bible

- Reklamy -

சங்கீதம் 33 - பரிசுத்த பைபிள்

1 நல்லோரே, கர்த்தருக்குள் களிப்படையுங்கள்! நல்ல நேர்மையான ஜனங்களே, அவரைத் துதியுங்கள்!

2 சுரமண்டலத்தை இசைத்து கர்த்தரைத் துதியுங்கள்! பத்து நரம்பு வீணையை இசைத்து கர்த்தரைப் பாடுங்கள்.

3 புதுப்பாட்டை அவருக்குப் பாடுங்கள்! மகிழ்ச்சியான இராகத்தை இனிமையாய் மீட்டுங்கள்.

4 தேவனுடைய வாக்கு உண்மையானது! அவர் செய்பவற்றை உறுதியாக நம்புங்கள்!

5 நன்மையையும் நேர்மையையும் தேவன் நேசிக்கிறார். கர்த்தர் பூமியை அவரது அன்பினால் நிரப்பியுள்ளார்.

6 கர்த்தர் கட்டளையிட, உலகம் உருவாயிற்று. தேவனுடைய வாயின் மூச்சு பூமியிலுள்ள அனைத்தையும் உருவாக்கிற்று.

7 கடலின் தண்ணீரை ஒரே இடத்தில் தேவன் ஒன்று திரட்டினார். அவர் சமுத்திரத்தை அதற்குரிய இடத்தில் வைக்கிறார்.

8 பூமியிலுள்ளோர் யாவரும் கர்த்தருக்குப் பயந்து அவரை மதிக்கவேண்டும். உலகில் வாழும் ஜனங்கள் எல்லோரும் அவருக்கு அஞ்ச வேண்டும்.

9 ஏனெனில் தேவன் கட்டளையிட, அக்காரியம் நிறைவேறுகிறது. அவர் “நில்!” எனக்கூற அக்காரியம் நின்றுவிடும்.

10 எல்லோருடைய அறிவுரையையும் பயனற்றுப்போகச் செய்ய கர்த்தராலாகும். அவர்கள் திட்டங்களை கர்த்தர் அழிக்கக் கூடும்.

11 கர்த்தருடைய அறிவுரை என்றென்றும் நல்லது. தலைமுறை தலைமுறைக்கும் அவர் திட்டங்கள் நன்மை தரும்.

12 கர்த்தரை தேவனாக ஏற்றுக்கொண்ட ஜனங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். தேவன் தனது சொந்த ஜனங்களாக அவர்களைத் தேர்ந்தெடுத்தார்.

13 பரலோகத்திலிருந்து கர்த்தர் கீழே பார்த்து, எல்லா ஜனங்களையும் கண்டார்.

14 அவரது உயர்ந்த சிங்காசனத்திலிருந்து பூமியில் வாழும் மனிதர்களையெல்லாம் பார்த்தார்.

15 ஒவ்வொருவனின் மனதையும் தேவன் படைத்தார். ஒவ்வொருவனின் எண்ணத்தையும் தேவன் அறிகிறார்.

16 ராஜா தனது சொந்த வல்லமையால் காப்பாற்றப்படுவதில்லை. ஒரு வீரன் தனது மிகுந்த பெலத்தால் காப்பாற்றப்படுவதில்லை.

17 போரில் குதிரைகள் உண்மையான வெற்றியைத் தருவதில்லை. அவற்றின் ஆற்றல் நம்மை தப்புவிக்க வகை செய்வதேயில்லை.

18 கர்த்தர் அவரைப் பின்பற்றுவோரை கவனித்துக் காப்பாற்றுகிறார். அவரது பேரன்பு அவரை தொழுதுகொள்வோரைக் காக்கும்.

19 தேவன் அந்த ஜனங்களை மரணத்தினின்று காக்கிறார். அவர்கள் பசித்திருக்கையில் அவர் பெலனளிக்கிறார்.

20 எனவே நாம் கர்த்தருக்காகக் காத்திருப்போம். அவரே நமக்கு உதவியும் கேடகமுமாயிருக்கிறார்.

21 தேவன் என்னை மகிழ்ச்சியடையச் செய்கிறார். அவரது பரிசுத்த நாமத்தை நான் உண்மையாக நம்புகிறேன்.

22 கர்த்தாவே, நாங்கள் உம்மை உண்மையாக தொழுதுகொள்கிறோம்! உமது பேரன்பை எங்களுக்குக் காண்பியும்.

Tamil Holy Bible: Easy-to-Read Version

All rights reserved.

© 1998 Bible League International

Bible League International
Následuj nás:



Reklamy