Online Bible

- Reklamy -

சங்கீதம் 32 - பரிசுத்த பைபிள்


மஸ்கீல், என்னும் தாவீதின் பாடல்.

1 பாவங்கள் மன்னிக்கப்பட்ட மனிதன் ஆசீர்வதிக்கப்பட்டவன். பாவங்கள் மூடப்பட்ட மனிதன் ஆசீர்வதிக்கப்பட்டவன்.

2 குற்றமற்றவன் என கர்த்தர் கூறும் மனிதன் ஆசீர்வதிக்கப்பட்டவன். இரகசியமான பாவங்களை மறைக்க முயலாதிருக்கிறவன் ஆசீர்வதிக்கப்பட்டவன்.

3 தேவனே, நான் மீண்டும், மீண்டும் உம்மிடம் ஜெபித்தேன். ஆனால் என் இரகசியமான பாவங்களைக் குறித்து நான் பேசவில்லை. நான் ஜெபித்த ஒவ்வொரு முறையும் என் வலிமை குன்றிப்போயிற்று.

4 தேவனே, இரவும் பகலும் என் வாழ்க்கையைமென்மேலும் கடினமாக்கினீர். கோடைக் காலத்தில் உலர்ந்து காய்ந்துபோன நிலத்தைப் போலானேன்.

5 என் பாவங்களையெல்லாம் கர்த்தரிடம் அறிக்கையிடத் தீர்மானித்தேன். கர்த்தாவே, உம்மிடம் என் பாவங்களைப் பற்றிக் கூறினேன். என் குற்றங்கள் எதையும் நான் மறைக்கவில்லை. என் பாவங்களை எல்லாம் நீர் எனக்கு மன்னித்தீர்.

6 இதற்காக, தேவனே, உம்மைப் பின்பற்றுவோர் உம்மிடம் ஜெபம் செய்யவேண்டும். வெள்ளப் பெருக்கைப்போல் தொல்லைகள் வந்தாலும் உம்மைப் பின்பற்றுவோர் ஜெபிக்கவேண்டும்.

7 தேவனே, நீர் எனக்கு மறைவிடமாயிருக்கிறீர். என் தொல்லைகளிலிருந்து நீர் என்னைக் காக்கிறீர். நீர் என்னைச் சூழ்ந்து என்னைக் காக்கிறீர். எனவே நீர் என்னைப் பாதுகாத்த வகையை நான் பாடுகிறேன்.

8 கர்த்தர், “நீ வாழவேண்டிய வழியை உனக்கு போதித்து வழிநடத்துவேன். உன்னைக் காத்து உனக்கு வழிகாட்டியாயிருப்பேன் என்று கூறுகிறார்.

9 எனவே குதிரையை அல்லது கழுதையைப் போல் மூடனாகாதே. அம்மிருகங்களை வழி நடத்துவோர் கடிவாளங்களையும் பயன்படுத்தாமல் அவற்றை கட்டுப்படுத்த இயலாது” என்கிறார்.

10 தீயோருக்கு வேதனைகள் பெருகும். கர்த்தரை நம்புவோரை தேவனுடைய உண்மையான அன்பு சூழ்ந்துகொள்ளும்.

11 நல்லோரே, கர்த்தருக்குள் மகிழ்ந்து களிகூருங்கள். பரிசுத்த இருதயமுள்ள ஜனங்களே! களிப்படையுங்கள்.

Tamil Holy Bible: Easy-to-Read Version

All rights reserved.

© 1998 Bible League International

Bible League International
Následuj nás:



Reklamy