Online Bible

- Reklamy -

சங்கீதம் 135 - பரிசுத்த பைபிள்

1 கர்த்தரைத் துதிப்போம்! கர்த்தருடைய நாமத்தைத் துதிப்போம்! கர்த்தருடைய ஊழியர்களே, அவரைத் துதியுங்கள்!

2 தேவனுடைய ஆலய முற்றத்தில், கர்த்தருடைய ஆலயத்தில் நிற்கும் ஜனங்களே, அவரைத் துதியுங்கள்.

3 கர்த்தர் நல்லவர், எனவே அவரைத் துதியுங்கள். அவரது நாமத்தைத் துதியுங்கள், ஏனெனில் அது இன்பமானது.

4 கர்த்தர் யாக்கோபைத் தேர்ந்தெடுத்தார். இஸ்ரவேல் தேவனுக்கு உரியது.

5 கர்த்தர் உயர்ந்தவர் என நான் அறிகிறேன்! நமது ஆண்டவர் எல்லா தெய்வங்களிலும் மேன்மையானவர்!

6 பரலோகத்திலும், பூமியிலும், கடல்களிலும் ஆழமான. சமுத்திரங்களிலும், கர்த்தர் அவருக்கு வேண்டியவற்றையெல்லாம் செய்கிறார்.

7 பூமியின்மேல் மேகங்களை தேவன் உண்டாக்குகிறார். தேவன் மின்னலையும் மழையையும் உண்டாக்குகிறார். தேவன் காற்றையும் உண்டாக்குகிறார்.

8 எகிப்தின் எல்லா முதற்பேறான ஆண்களையும், எல்லா முதற்பேறான மிருகங்களையும் தேவன் அழித்தார்.

9 எகிப்தில் தேவன் பல அற்புதங்களையும் அதிசயங்களையும் நிகழ்த்தினார். பார்வோனுக்கும் அவனது அதிகாரிகளுக்கும் தேவன் அக்காரியங்களை நிகழப்பண்ணினார்.

10 தேவன் பல தேசங்களை முறியடித்தார். தேவன் வல்லமையுடைய ராஜாக்களைக் கொன்றார்.

11 எமோரியரின் ராஜாவாகிய சீகோனை தேவன் தோற்கடித்தார். பாஷானின் ராஜாவாகிய ஓகையும் தேவன் தோற்கடித்தார். கானானின் எல்லா தேசங்களையும் தேவன் தோற்கடித்தார்.

12 தேவன் இஸ்ரவேலருக்கு அவர்களின் தேசத்தைக் கொடுத்தார். அவரது ஜனங்களுக்கு தேவன் அத்தேசத்தைக் கொடுத்தார்.

13 கர்த்தாவே, உமது நாமம் என்றென்றும் புகழ்வாய்ந்ததாயிருக்கும். கர்த்தாவே, ஜனங்கள் உம்மை என்றென்றைக்கும் எப்போதும் நினைவுக்கூருவார்கள்.

14 கர்த்தர் தேசங்களைத் தண்டித்தார். ஆனால் கர்த்தர் அவரது ஊழியரிடம் தயவுடையவராயிருந்தார்.

15 பிற ஜனங்களின் தெய்வங்கள் வெறும் பொன்னாலும் வெள்ளியாலுமாகிய சிலைகள் மட்டுமே. அவர்களின் தெய்வங்கள் ஜனங்கள் செய்த வெறும் சிலைகள் மட்டுமே.

16 சிலைகளுக்கு வாய்கள் இருந்தன, ஆனால் பேச முடியவில்லை. சிலைகளுக்குக் கண்கள் இருந்தன, ஆனால் பார்க்க முடியவில்லை.

17 சிலைகளுக்குக் காதுகள் இருந்தன, ஆனால் கேட்க முடியவில்லை. சிலைகளுக்கு மூக்குகள் இருந்தன, ஆனால் முகர்ந்துபார்க்க முடியவில்லை.

18 அச்சிலைகளைச் செய்த ஜனங்களும் அவற்றைப் போலாவார்கள். ஏனெனில் அச்சிலைகள் அவர்களுக்கு உதவ வேண்டுமென்று அவர்கள் நம்பினார்கள்.

19 இஸ்ரவேலின் குடும்பமே, கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள்! ஆரோனின் குடும்பமே, கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள்!

20 லேவியின் குடும்பமே, கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள்! கர்த்தரைப் பின்பற்றுவோரே, கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள்!

21 கர்த்தர் சீயோனிலிருந்தும், அவரது வீடாகிய எருசலேமிலிருந்தும் போற்றப்படுகிறார். கர்த்தரைத் துதியுங்கள்!

Tamil Holy Bible: Easy-to-Read Version

All rights reserved.

© 1998 Bible League International

Bible League International
Následuj nás:



Reklamy