Online Bible

- Reklamy -

ஏசாயா 56 - பரிசுத்த பைபிள்


அனைத்து தேசங்களும் கர்த்தரைப் பின்பற்றும்

1 கர்த்தர் இவற்றைச் சொன்னார், “அனைத்து ஜனங்களிடமும் நியாயமாக இருங்கள், நீதியானவற்றைச் செய்யுங்கள். ஏனென்றால், எனது இரட்சிப்பு விரைவில் உனக்கு வரும். உலகம் முழுவதற்கும் எனது இரட்சிப்பு விரைவில் காட்டப்படும்.”

2 ஓய்வு நாளில் தேவனுடைய சட்டங்களுக்கு அடிபணிந்து வாழ்கிறவன் ஆசீர்வதிக்கப்படுவான். தீமை செய்யாதவன் மகிழ்ச்சியுடன் இருப்பான்.

3 யூதரல்லாத சிலர் கர்த்தரோடு தாங்களாகவே சேர்ந்துகொள்வார்கள். அவர்கள், “கர்த்தர் தமது ஜனங்களோடு எங்களைச் சேர்த்துக்கொள்ளமாட்டார்” என்று சொல்லமாட்டார்கள். “நான் ஒரு காய்ந்த மரத்துண்டு. நான் குழந்தைகளைப் பெற முடியாதவன்” என்று அலிகள் சொல்லக்கூடாது.

4-5 அலிகள் இவ்வாறு சொல்லமாட்டார்கள். ஏனென்றால், கர்த்தர் கூறுகிறார், “ஓய்வு நாளில் அலிகளில் சிலர், என் உடன்படிக்கைகளுக்கு அடிபணிகிறார்கள். அவர்கள் நான் விரும்புகின்றவற்றைச் செய்வதற்குத் தேர்ந்தெடுக்கிறார்கள். அவர்கள் உண்மையில் என் உடன்படிக்கைகளைப் பின்பற்றுகிறார்கள். எனவே, நான் ஆலயத்தில் ஒரு ஞாபகக் கல்லை அவர்களுக்காக வைப்பேன். அவர்களின் பெயர் என் நகரத்தில் நினைவுகூரப்படும். ஆம், நான் அந்த அலிகளுக்கு குமாரர்கள் குமாரத்திகள் ஆகியோரைவிடச் சிறந்ததான சிலவற்றைக் கொடுப்பேன். நித்தியமான ஒரு பெயரை நான் அவர்களுக்குக் கொடுப்பேன். அவர்கள் எனது ஜனங்களிடமிருந்து வெட்டப்படமாட்டார்கள்.”

6 கர்த்தரோடு யூதரால்லாத சில ஜனங்களும் சேருவார்கள். அவர்கள் இதைச் செய்வார்கள். எனவே, அவருக்குத் தொண்டு செய்யமுடியும். கர்த்தருடைய நாமத்தை நேசிக்கின்றனர். அவர்கள் தாங்களாகவே கர்த்தரோடு அவரது ஊழியக்காரர்களாகச் சேருவார்கள். அவர்கள் ஓய்வுநாளை வழிபாட்டுக்குரிய சிறந்த நாளாக எடுத்துக்கொள்வார்கள். அவர்கள் தொடர்ந்து எனது உடன்படிக்கையை (சட்டம்) நெருக்கமாகப் பின்பற்றுவார்கள்.

7 கர்த்தர் கூறுகிறார், “எனது பரிசுத்தமான மலைக்கு நான் அந்த ஜனங்களை அழைத்து வருவேன். ஜெபக்கூடத்தில் அவர்களை மகிழ்ச்சியுடன் இருக்கச் செய்வேன். அவர்கள் தரும் காணிக்கைகளும் பலிகளும் என்னைத் திருப்திப்படுத்தும் எனென்றால், எனது ஆலயம் எல்லா நாடுகளுக்குமான ஜெபவீடாக அழைக்கப்படும்.”

8 எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார். இஸ்ரவேல் ஜனங்கள் தம் நாட்டை விட்டுப்போக வற்புறுத்தப்பட்டனர். ஆனால் மீண்டும் கர்த்தர் அவர்களை ஒன்று சேர்த்துவிடுவார். கர்த்தர், “நான் மீண்டும் இந்த ஜனங்களை ஒன்று சேர்ப்பேன்” என்று கூறுகிறார்.

9 காட்டு மிருகங்களே, வாருங்கள். உண்ணுங்கள்!

10 காவல்காரர்கள் (தீர்க்கதரிசிகள்) குருடராய் இருக்கிறார்கள். அவர்களுக்குத் தாம் என்ன செய்கிறோம் என்று தெரியவில்லை. அவர்கள் குரைக்காத நாய்களைப்போன்றவர்கள். அவர்கள் தரையில் கிடந்து தூங்குகிறார்கள். அவர்கள் தூங்குவதை நேசிக்கிறார்கள்.

11 அவர்கள் பசித்த நாய்களைப்போன்றவர்கள். அவர்கள் எப்பொழுதும் திருப்தி அடையமாட்டார்கள். மேய்ப்பர்களுக்கு என்ன செய்கிறோம் என்று தெரியவில்லை. அவர்கள் தம் ஆடுகளைப்போன்றுள்ளனர். அவை எப்பொழுதும் அலைந்துகொண்டிருக்கின்றன. அவர்கள் பேராசைக்காரர்கள். அவர்கள் அனைவரும் தங்கள் திருப்திக்காகச் செய்ய விரும்புகின்றனர்.

12 அவர்கள் வந்து சொல்கிறார்கள், “நான் கொஞ்சம் திராட்சைரசம் குடிப்பேன், நான் கொஞ்சம் மது குடிப்பேன். நான் நாளையும் இதனையே செய்வேன். இன்னும் அதிகமாகக் குடிப்பேன்.”

Tamil Holy Bible: Easy-to-Read Version

All rights reserved.

© 1998 Bible League International

Bible League International
Následuj nás:



Reklamy