Online Bible

- Reklamy -

ஏசாயா 32 - பரிசுத்த பைபிள்


தலைவர்கள் நல்லவர்களாகவும் நேர்மையானவர்களாகவும் இருக்கவேண்டும்

1 நான் சொல்லுகிறவற்றைக் கேளுங்கள்! ஒரு ராஜா நன்மையைத்தரும் ஆட்சி செய்ய வேண்டும். தலைவர்கள் ஜனங்களை வழிநடத்திச் செல்லும்போது நீதியான முடிவுகளை எடுக்க வேண்டும்.

2 இது நிகழ்ந்தால், ராஜா காற்றுக்கும் மழைக்கும் மறைந்துகொள்வதற்கு ஏற்ற இடமாக இருப்பான். வறண்ட பூமிக்கு நீரோடை வந்ததுபோல இருக்கும். இது வெப்பமான பூமியில் பெருங்கன்மலையில் குளிர்ந்த நிழல்போல் இருக்கும்.

3 ஜனங்கள் உதவிக்காக ராஜாவிடம் திரும்புவார்கள். ஜனங்கள் உண்மையில் அவர் சொல்லுவதைக் கவனிப்பார்கள்.

4 குழம்பிப்போன ஜனங்கள் இப்பொழுது புரிந்துகொள்வார்கள். தெளிவாகப் பேச முடியாத ஜனங்கள் இப்பொழுது தெளிவாகவும் பேசுவார்கள்.

5 நாத்திகர்கள் உயர்ந்த மனிதர்கள் என்று அழைக்கப்படமாட்டார்கள். மோசடிக்காரர்கள் மதிப்பிற்குரியவர்கள் என்றழைக்கப்படமாட்டார்கள்.

6 ஒரு நாத்திகன் தீயவற்றைப் பேசுகிறான். அவனது மனதில் தீயவற்றைச் செய்வதற்கே திட்டங்கள் இருக்கும். ஒரு துன்மார்க்கன் தவறானவற்றைச் செய்வதற்கே விரும்புகிறான். ஒரு துன்மார்க்கன் கர்த்தரைப்பற்றி கெட்டவற்றையே பேசுகிறான். ஒரு துன்மார்க்கன் பசித்த ஜனங்களைச் சாப்பிட அனுமதிக்கமாட்டான். ஒரு துன்மார்க்கன் தாகமாயிருக்கும் ஜனங்களைத் தண்ணீர் குடிக்கவிடமாட்டான்.

7 அந்த நாத்திகன் கெட்டவற்றைக் கருவியாகப் பயன்படுத்துவான். ஏழை ஜனங்களிடமிருந்து எல்லாவற்றையும் எடுத்துக்கொள்ளும் வழிகளை அவன் திட்டமிடுவான். அந்த துன்மார்க்கன் ஏழை ஜனங்களைப்பற்றிப் பொய் சொல்லுகிறான். அவனது பொய்கள் ஏழை ஜனங்களை நேர்மையான தீர்ப்பு பெறுவதிலிருந்து விலக்குகிறது.

8 ஆனால் நல்ல தலைவன், நல்லவற்றைச் செய்யத் திட்டமிடுகிறான். அந்த நல்லவை அவனை நல்ல தலைவனாகச் செய்கிறது.


கடினமான நேரங்கள் வந்து கொண்டிருக்கின்றன

9 உங்களில் சில பெண்கள் இப்போது மிக அமைதியாக இருக்கிறீர்கள். நீங்கள் பாதுகாப்பை உணருகிறீர்கள். ஆனால், நான் சொல்லுகிற வார்த்தைகளை நீங்கள் நின்று கவனிக்க வேண்டும்.

10 பெண்களாகிய நீங்கள் இப்போது அமைதியை உணருகிறீர்கள். ஆனால், ஒரு ஆண்டுக்குப் பிறகு தொல்லைக்குள்ளாவீர்கள். ஏனென்றால், அடுத்த ஆண்டு திராட்சைகளை நீங்கள் பறிக்க மாட்டீர்கள். ஏனென்றால், பறிப்பதற்குத் திராட்சைகள் இருக்காது.

11 பெண்களே! இப்பொழுது நீங்கள் அமைதியாய் இருக்கிறீர்கள். ஆனால், நீங்கள் அச்சுறுத்தப்பட வேண்டும். பெண்களே! இப்போது நீங்கள் அமைதியை உணருகிறீர்கள். ஆனால் நீங்கள் கவலைக்குட்பட வேண்டும். உங்களது மென்மையான ஆடைகளை எடுத்துவிடுங்கள். துக்கத்திற்குரிய ஆடைகளை அணிந்துகொள்ளுங்கள். அந்த ஆடைகளை உங்கள் இடுப்பில் கட்டிக் கொள்ளுங்கள்.

12 துக்கத்துக்குரிய ஆடைகளை துன்பம் நிறைந்த உங்கள் மார்புக்கு மேல் போட்டுக்கொள்ளுங்கள். உங்கள் வயல்கள் காலியானதால் அலறுங்கள். உங்கள் திராட்சைத் தோட்டங்கள் ஒரு காலத்தில் திராட்சைப் பழங்களைத் தந்தன. ஆனால் இப்போது அவை காலியாக உள்ளன.

13 எனது ஜனங்களின் பூமிக்காக அலறுங்கள். ஏனென்றால், இப்பொழுது முட்களும் நெருஞ்சியும் மட்டுமே வளரும். நகரத்திற்காக அலறுங்கள். ஒரு காலத்தில் மகிழ்ச்சியால் நிறைந்திருந்த வீடுகளுக்காக அலறுங்கள்.

14 ஜனங்கள் தலைநகரத்தைவிட்டு வெளியேறுவார்கள். அரண்மனையும் கோபுரங்களும் காலியாகும். ஜனங்கள் வீடுகளில் வாழமாட்டார்கள். அவர்கள் குகைகளில் வாழுவார்கள். காட்டுக் கழுதைகளும் ஆடுகளும் நகரத்தில் வாழும். மிருகங்கள் அங்கே புல்மேயப்போகும்.

15-16 தேவன் மேலேயிருந்து அவரது ஆவியைக் கொடுக்கும்வரை இது தொடரும். இப்பொழுது பூமியில் நன்மை இல்லை. இது இப்போது வனாந்திரம்போல் உள்ளது. ஆனால் எதிர்காலத்தில். இந்த வனாந்திரம் கர்மேல் போலாகும். அங்கே நேர்மையான தீர்ப்புகள் இருக்கும். கர்மேல் பசுமைக் காடுகளைப்போன்று ஆகும். நன்மை அங்கே வாழும்.

17 என்றென்றைக்கும் இந்த நன்மை சமாதானத்தையும் பாதுகாப்பையும் கொண்டுவரும்.

18 எனது ஜனங்கள் சமாதானத்தின் அழகிய வயலில் வாழுவார்கள். எனது ஜனங்கள் பாதுகாப்பின் கூடாரங்களில் வாழுவார்கள். அவர்கள் அமைதியும் சமாதானமும் உள்ள இடங்களில் வாழுவார்கள்.

19 ஆனால் இவை நிகழும்முன்பு, காடுகள் விழவேண்டும். நகரம் தோற்கடிக்கப்படவேண்டும்.

20 நீங்கள் தண்ணீர் நிலையுள்ள இடங்களில் விதைக்கிறீர்கள். அங்கே உங்கள் கழுதைகளையும் மாடுகளையும் சுதந்திரமாகத் திரியவும் மேயவும் விடுகிறீர்கள். நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

Tamil Holy Bible: Easy-to-Read Version

All rights reserved.

© 1998 Bible League International

Bible League International
Následuj nás:



Reklamy