Online Bible

- Reklamy -

வெளிப்படுத்தல் 5 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்


அத்தியாயம் 5 புத்தகச் சுருளும், ஆட்டுக்குட்டியும்

1 பின்னும், உள்ளேயும் வெளியேயும் எழுதப்பட்டு, ஏழு முத்திரைகளால் முத்திரை போடப்பட்டிருந்த ஒரு புத்தகத்தை சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்தவருடைய வலது கையிலே பார்த்தேன்.

2 புத்தகத்தைத் திறக்கவும் அதின் முத்திரைகளை உடைக்கவும் தகுதியானவர் யார்? என்று அதிக சத்தமாகக் கேட்கிற பலமுள்ள ஒரு தூதனையும் பார்த்தேன்.

3 வானத்திலோ, பூமியிலோ, பூமியின் கீழாவது, ஒருவனும் அந்தப் புத்தகத்தைத் திறக்கவும், அதைப் படிக்கவும் முடியாமல் இருந்தது.

4 ஒருவனும் அந்தப் புத்தகத்தைத் திறக்கவும் படிக்கவும் தகுதியானவனாக இல்லாததினால் நான் மிகவும் அழுதேன்.

5 அப்பொழுது மூப்பர்களில் ஒருவன் என்னைப் பார்த்து: நீ அழவேண்டாம்; இதோ, யூதா கோத்திரத்தின் சிங்கமும், தாவீதின் வேருமானவர் புத்தகத்தைத் திறக்கவும் அதின் ஏழு முத்திரைகளையும் உடைக்கவும் ஜெயங்கொண்டிருக்கிறார் என்றான்.

6 அப்பொழுது, இதோ, அடிக்கப்பட்ட நிலையில் இருக்கிற ஒரு ஆட்டுக்குட்டி சிங்காசனத்திற்கும், நான்கு ஜீவன்களுக்கும், மூப்பர்களுக்கும் நடுவிலே நிற்பதைக் கண்டேன்; அது ஏழு கொம்புகளையும் ஏழு கண்களையும் உடையதாக இருந்தது; அந்தக் கண்கள் பூமியெல்லாம் அனுப்பப்படுகிற தேவனுடைய ஏழு ஆவிகளே.

7 அந்த ஆட்டுக்குட்டியானவர் வந்து, சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்தவருடைய வலது கரத்திலிருந்து அந்தப் புத்தகத்தை வாங்கினார்.

8 அந்தப் புத்தகத்தை அவர் வாங்கினபோது, அந்த நான்கு ஜீவன்களும், இருபத்துநான்கு மூப்பர்களும் தங்களுடைய சுரமண்டலங்களையும், பரிசுத்தவான்களுடைய ஜெபங்களாகிய தூபவர்க்கத்தால் நிறைந்த பொற்கலசங்களையும் பிடித்துக்கொண்டு, ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாக முகங்குப்புறவிழுந்து:

9 “தேவரீர் புத்தகத்தை வாங்கவும் அதின் முத்திரைகளை உடைக்கவும் தகுதி உள்ளவராக இருக்கிறீர்; ஏனென்றால், நீர் அடிக்கப்பட்டு, எல்லாக் கோத்திரங்களிலும், மொழிகளிலும், மக்களிலும், தேசங்களிலும் இருந்து எங்களை தேவனுக்காக உம்முடைய இரத்தத்தினாலே மீட்டுக்கொண்டு,

10 எங்களுடைய தேவனுக்குமுன்பாக எங்களை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கினீர்; நாங்கள் பூமியிலே அரசாளுவோம்” என்று புதிய பாட்டைப் பாடினார்கள்.

11 பின்னும் நான் பார்த்தபோது, சிங்காசனத்தையும் ஜீவன்களையும் மூப்பர்களையும் சுற்றியிருந்த அநேக தூதர்களுடைய சத்தத்தைக் கேட்டேன்; அவர்களுடைய எண்ணிக்கை கோடானகோடியாக இருந்தது.

12 அவர்களும் அதிக சத்தமிட்டு: அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவர் வல்லமையையும் ஐசுவரியத்தையும் ஞானத்தையும் பெலத்தையும் கனத்தையும் மகிமையையும் ஸ்தோத்திரத்தையும் பெற்றுக்கொள்ளத் தகுதியுள்ளவராக இருக்கிறார் என்று சொன்னார்கள்.

13 அப்பொழுது, வானத்திலும், பூமியிலும், பூமியின் கீழும் இருக்கிற படைப்புகளும், கடலில் உள்ள எல்லா ஜீவன்களும்: சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் ஸ்தோத்திரமும் கனமும் மகிமையும் வல்லமையும் எல்லாக் காலங்களிலும் உண்டாவதாக என்று சொல்வதைக்கேட்டேன்.

14 அதற்கு நான்கு ஜீவன்களும்: ஆமென் என்று சொல்லின. இருபத்துநான்கு மூப்பர்களும் முகங்குப்புறவிழுந்து எல்லாக் காலங்களிலும் உயிரோடு இருக்கிறவரைத் தொழுதுகொண்டார்கள்.

TAM-IRV

Creative Commons License

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.

Bridge Connectivity Solutions Pvt. Ltd.
Následuj nás:



Reklamy