Online Bible

- Reklamy -

வெளிப்படுத்தல் 4 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்


அத்தியாயம் 4 தேவனுடைய சிங்காசனம்

1 இவைகளுக்குப் பின்பு, இதோ, பரலோகத்தில் திறக்கப்பட்டிருந்த ஒரு வாசலைக் கண்டேன். முதலில் எக்காளசத்தம்போல என்னோடு பேசின சத்தமானது: இங்கே ஏறிவா, இவைகளுக்குப் பின்பு நடக்கவேண்டியவைகளை உனக்குக் காண்பிப்பேன் என்று சொன்னது.

2 உடனே ஆவிக்குள்ளானேன்; அப்பொழுது, இதோ, வானத்தில் ஒரு சிங்காசனம் வைக்கப்பட்டிருந்தது, அந்தச் சிங்காசனத்தின்மேல் ஒருவர் வீற்றிருந்தார்.

3 வீற்றிருந்தவர், பார்ப்பதற்கு வச்சிரக்கல்லைப்போலவும், பதுமராகத்தைப்போலவும் இருந்தார்; அந்த சிங்காசனத்தைச் சுற்றிலும் ஒரு வானவில் இருந்தது; அது பார்ப்பதற்கு மரகதம்போல தோன்றியது.

4 அந்த சிங்காசனத்தைச் சுற்றிலும் இருபத்துநான்கு சிங்காசனங்கள் இருந்தன; இருபத்துநான்கு மூப்பர்கள் வெண்மையான ஆடை அணிந்து, தங்களுடைய தலைகளில் பொற்கிரீடம் சூடி, அந்த சிங்காசனங்களின்மேல் உட்கார்ந்திருப்பதைப் பார்த்தேன்.

5 அந்தச் சிங்காசனத்தில் இருந்து மின்னல்களும் இடிமுழக்கங்களும் சத்தங்களும் புறப்பட்டன; தேவனுடைய ஏழு ஆவிகளாகிய ஏழு அக்கினி தீபங்கள் சிங்காசனத்திற்கு முன்பாக எரிந்துகொண்டிருந்தன.

6 அந்தச் சிங்காசனத்திற்கு முன்பாகப் பளிங்குக் கல்லைப்போல கண்ணாடிக் கடல் இருந்தது; அந்தச் சிங்காசனத்தின் நடுவிலும் அந்தச் சிங்காசனத்தைச் சுற்றிலும் நான்கு ஜீவன்கள் இருந்தன, அவைகள் முன்பக்கத்திலும் பின்பக்கத்திலும் கண்களால் நிறைந்திருந்தன.

7 முதலாம் ஜீவன் சிங்கத்தைப்போலவும், இரண்டாம் ஜீவன் காளையைப்போலவும், மூன்றாம் ஜீவன் மனிதமுகம் போன்ற முகம் உள்ளதாகவும், நான்காம் ஜீவன் பறக்கிற கழுகுபோலவும் இருந்தன.

8 அந்த நான்கு ஜீவன்களிலும் ஒவ்வொன்றும் ஆறுஆறு சிறகுகள் உள்ளவைகளும், சுற்றிலும், உள்ளேயும் கண்களால் நிறைந்தவைகளுமாக இருந்தன. அவைகள்: “இருந்தவரும் இருக்கிறவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்” என்று இரவும் பகலும் ஓய்வு இல்லாமல் சொல்லிக்கொண்டிருந்தன.

9 மேலும், சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்து, எல்லாக் காலங்களிலும் உயிரோடு இருக்கிறவருக்கு அந்த ஜீவன்கள், மகிமையையும் கனத்தையும் ஸ்தோத்திரத்தையும் செலுத்தும்போது,

10 இருபத்துநான்கு மூப்பர்களும் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருக்கு முன்பாகத் தாழவிழுந்து, எல்லாக் காலங்களிலும் உயிரோடு இருக்கிறவரைத் தொழுதுகொண்டு, தங்களுடைய கிரீடங்களைச் சிங்காசனத்திற்கு முன்பாக வைத்து:

11 கர்த்தாவே, தேவரீர், மகிமையையும் கனத்தையும் வல்லமையையும் பெற்றுக்கொள்கிறதற்குத் தகுதி உடையவராக இருக்கிறீர்; நீரே எல்லாவற்றையும் படைத்தீர், உம்முடைய விருப்பத்தினாலே அவைகள் உண்டாயிருக்கிறவைகளும் படைக்கப்பட்டவைகளுமாக இருக்கிறது” என்றார்கள்.

TAM-IRV

Creative Commons License

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.

Bridge Connectivity Solutions Pvt. Ltd.
Následuj nás:



Reklamy