Online Bible

- Reklamy -

நீதிமொழி 19 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்


அத்தியாயம் 19 ஞானம் நன்மைகளின் ஊற்று

1 மாறுபாடான உதடுகளுள்ள மூடனைவிட, உத்தமனாக நடக்கிற தரித்திரனே சிறப்பானவன்.

2 ஆத்துமா அறிவில்லாமல் இருப்பது நல்லதல்ல; கால் துரிதமானவன் தப்பி நடக்கிறான்.

3 மனிதனுடைய மதியீனம் அவனுடைய வழியைத் தாறுமாறாக்கும்; என்றாலும் அவனுடைய மனம் யெகோவாவுக்கு விரோதமாக எரிச்சலடையும்.

4 செல்வம் அநேக நண்பர்களைச் சேர்க்கும்; தரித்திரனோ தன்னுடைய நண்பனாலும் பிரிந்துபோவான்.

5 பொய்ச்சாட்சிக்காரன் தண்டனைக்குத் தப்பான்; பொய்களைப் பேசுகிறவனும் தப்புவதில்லை.

6 பிரபுவின் தயவை அநேகர் வருந்திக் கேட்பார்கள்; கொடைகொடுக்கிறவனுக்கு எவனும் நண்பன்.

7 தரித்திரனை அவனுடைய சகோதரர்கள் எல்லோரும் பகைக்கிறார்களே, எத்தனை அதிகமாக அவனுடைய நண்பர்கள் அவனுக்குத் தூரமாவார்கள்; அவர்களுடைய வார்த்தைகளை அவன் நாடுகிறான், அவைகளோ வெறும் வார்த்தைகளே.

8 ஞானத்தைப் பெற்றுக்கொள்ளுகிறவன் தன்னுடைய ஆத்துமாவை நேசிக்கிறான்; புத்தியைக் காக்கிறவன் நன்மையடைவான்.

9 பொய்சாட்சிக்காரன் தண்டனைக்குத் தப்பமாட்டான்; பொய்களைப் பேசுகிறவன் நாசமடைவான்.

10 மூடனுக்குச் செல்வம் தகாது; பிரபுக்களை ஆண்டுகொள்வது அடிமையானவனுக்கு எவ்வளவும் தகாது.

11 மனிதனுடைய விவேகம் அவனுடைய கோபத்தை அடக்கும்; குற்றத்தை மன்னிப்பது அவனுக்கு மகிமை.

12 ராஜாவின் கோபம் சிங்கத்தின் கெர்ச்சிப்புக்குச் சமானம்; அவனுடைய தயவு புல்லின்மேல் பெய்யும் பனிபோல இருக்கும்.

13 மூடனாகிய மகன் தன்னுடைய தகப்பனுக்கு மிகுந்த துக்கம்; மனைவியின் சண்டைகள் ஓயாமல் ஒழுகும் நீர்.

14 வீடும் செல்வமும் பெற்றோர்கள் வைக்கும் சொத்து; புத்தியுள்ள மனைவியோ யெகோவா அருளும் ஈவு.

15 சோம்பல் தூங்கிவிழச்செய்யும்; அசதியானவன் பட்டினியாக இருப்பான்.

16 கட்டளையைக் காத்துக்கொள்ளுகிறவன் தன்னுடைய ஆத்துமாவைக் காக்கிறான்; தன்னுடைய வழிகளை அவமதிக்கிறவன் சாவான்.

17 ஏழைக்கு இரங்குகிறவன் யெகோவாவுக்குக் கடன்கொடுக்கிறான்; அவன் கொடுத்ததை அவர் திரும்பக் கொடுப்பார்.

18 நம்பிக்கையிருக்கும்வரை உன்னுடைய மகனைத் தண்டி; ஆனாலும் அவனைக் கொல்ல உன்னுடைய ஆத்துமாவில் தீர்மானிக்காதே.

19 கடுங்கோபி தண்டனைக்குள்ளாவான்; நீ அவனைத் தப்புவித்தால் திரும்பவும் தப்புவிக்கவேண்டியதாக வரும்.

20 உன்னுடைய முடிவுகாலத்தில் நீ ஞானமுள்ளவனாக இருக்கும்படி, ஆலோசனையைக்கேட்டு, புத்திமதியை ஏற்றுக்கொள்.

21 மனிதனுடைய இருதயத்தின் எண்ணங்கள் அநேகம்; ஆனாலும் யெகோவாவுடைய யோசனையே நிலைநிற்கும்.

22 நன்மைசெய்ய மனிதன் கொண்டிருக்கும் ஆசையே தயவு; பொய்யனைவிட தரித்திரன் சிறப்பானவன்.

23 யெகோவாவுக்குப் பயப்படுதல் வாழ்க்கைக்கு ஏதுவானது; அதை அடைந்தவன் திருப்தியடைந்து நிலைத்திருப்பான்; தீமை அவனை அணுகாது.

24 சோம்பேறி தன்னுடைய கையை பாத்திரத்திலே வைத்து, அதைத் திரும்பத் தன்னுடைய வாய்க்குகூட கொண்டுபோகாமல் இருக்கிறான்.

25 பரியாசக்காரனை அடி, அப்பொழுது பேதை எச்சரிக்கப்படுவான்; புத்திமானைக் கடிந்துகொள், அவன் அறிவுள்ளவனாவான்.

26 தன்னுடைய தகப்பனைக் கொள்ளையடித்து, தன்னுடைய தாயைத் துரத்திவிடுகிறவன், வெட்கத்தையும், அவமானத்தையும் உண்டாக்குகிற மகன்.

27 என் மகனே, அறிவைத் தரும் வார்த்தைகளைவிட்டு விலகச்செய்யும் போதகங்களை நீ கேட்காதே.

28 அநியாய சாட்சிக்காரன் நியாயத்தை சபிக்கிறான்; துன்மார்க்கர்களுடைய வாய் அக்கிரமத்தை விழுங்கும்.

29 பரியாசக்காரர்களுக்குத் தண்டனைகளும், மூடர்களுடைய முதுகுக்கு அடிகளும் ஆயத்தமாக இருக்கிறது.

TAM-IRV

Creative Commons License

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.

Bridge Connectivity Solutions Pvt. Ltd.
Následuj nás:



Reklamy