Online Bible

- Reklamy -

எண்ணாகமம் 12 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்


அத்தியாயம் 12

1 எத்தியோப்பியா தேசத்து பெண்ணை மோசே திருமணம்செய்திருந்தபடியால், மிரியாமும் ஆரோனும் அவன் திருமணம்செய்த எத்தியோப்பியா தேசத்து பெண்ணினால் அவனுக்கு விரோதமாகப் பேசி:

2 “யெகோவா மோசேயைக்கொண்டுமட்டும் பேசினாரோ, எங்களைக்கொண்டும் அவர் பேசினதில்லையோ என்றார்கள். யெகோவா அதைக் கேட்டார்.

3 மோசேயானவன் பூமியிலுள்ள சகல மனிதர்களிலும் மிகுந்த சாந்தகுணமுள்ளவனாக இருந்தான்.

4 உடனே யெகோவா மோசேயையும் ஆரோனையும் மிரியாமையும் நோக்கி: “நீங்கள் மூன்று பேரும் ஆசரிப்புக்கூடாரத்திற்குப் புறப்பட்டு வாருங்கள் என்றார்; மூன்றுபேரும் போனார்கள்.

5 யெகோவா மேகத்தூணில் இறங்கி, கூடாரவாசலிலே நின்று, ஆரோனையும் மிரியாமையும் கூப்பிட்டார்; அவர்கள் இருவரும் போனார்கள்.

6 அப்பொழுது அவர்: “என்னுடைய வார்த்தைகளைக் கேளுங்கள்; உங்களுக்குள்ளே ஒருவன் தீர்க்கதரிசியாக இருந்தால், யெகோவாவாகிய நான் தரிசனத்தில் என்னை அவனுக்கு வெளிப்படுத்தி, சொப்பனத்தில் அவனோடு பேசுவேன்.

7 என்னுடைய தாசனாகிய மோசேயோ அப்படிப்பட்டவன் அல்ல, என்னுடைய வீட்டில் எங்கும் அவன் உண்மையுள்ளவன்.

8 நான் அவனுடன் மறைபொருளாக அல்ல, முகமுகமாக பேசுகிறேன்; அவன் யெகோவாவின் சாயலைக் காண்கிறான்; இப்படியிருக்க, நீங்கள் என்னுடைய தாசனாகிய மோசேக்கு விரோதமாகப் பேச, உங்களுக்குப் பயமில்லாமல் போனது என்ன என்றார்.

9 யெகோவாவுடைய கோபம் அவர்கள்மேல் மூண்டது; அவர் போய்விட்டார்.

10 மேகம் கூடாரத்தை விட்டு நீங்கிப்போயிற்று; மிரியாம் உறைந்த மழையின் வெண்மைபோன்ற தொழுநோயாளியானாள்; ஆரோன் மிரியாமைப் பார்த்தபோது, அவள் தொழுநோயாளியாக இருக்கக் கண்டான்.

11 அப்பொழுது ஆரோன் மோசேயை நோக்கி: “ஆ, என்னுடைய ஆண்டவனே, நாங்கள் புத்தியீனமாகச் செய்த இந்தப் பாவத்தை எங்கள்மேல் சுமத்தாமலிரும்.

12 தன் தாயின் கர்ப்பத்தில் பாதி மாம்சம் அழுகிச் செத்துவிழுந்த பிள்ளையைப்போல அவள் ஆகாமலிருப்பாளாக” என்றான்.

13 அப்பொழுது மோசே யெகோவாவை நோக்கி: “என்னுடைய தேவனே. அவளைக் குணமாக்கும் என்று கெஞ்சினான்.

14 யெகோவா மோசேயை நோக்கி: “அவளுடைய தகப்பன் அவளுடைய முகத்திலே காறித் துப்பினால், அவள் ஏழுநாட்கள் வெட்கப்படவேண்டாமோ, அதுபோலவே அவள் ஏழுநாள் முகாமிற்குப் புறம்பே விலக்கப்பட்டிருந்து, பின்பு சேர்த்துக்கொள்ளப்படவேண்டும் என்றார்.

15 அப்படியே மிரியாம் ஏழு நாட்கள் முகாமிற்குப் புறம்பே விலக்கப்பட்டிருந்தாள்; மிரியாம் சேர்த்துக்கொள்ளப்படும்வரை மக்கள் பயணம் செய்யாமலிருந்தார்கள்.

16 பின்பு, மக்கள் ஆஸரோத்திலிருந்து புறப்பட்டு, பாரான் வனாந்திரத்திலே முகாமிட்டார்கள்.

TAM-IRV

Creative Commons License

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.

Bridge Connectivity Solutions Pvt. Ltd.
Následuj nás:



Reklamy