Online Bible

- Reklamy -

மீகா 1 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்


அத்தியாயம் 1

1 யோதாம், ஆகாஸ், எசேக்கியா என்னும் யூதா ராஜாக்களுடைய நாட்களில், மொரேசா ஊரைச்சேர்ந்த மீகாவுக்கு உண்டானதும், அவன் சமாரியாவிற்கும் எருசலேமிற்கும் விரோதமாகப் பெற்றுக்கொண்டதுமான யெகோவாவுடைய வார்த்தை.


இஸ்ரவேலின்மேல் வரப்போகும் நியாயத்தீர்ப்பு

2 அனைத்து மக்களே, கேளுங்கள்; பூமியே, அதிலுள்ளவைகளே, செவிகொடுங்கள்; யெகோவாகிய ஆண்டவர், தம்முடைய பரிசுத்த ஆலயத்திலிருக்கிற ஆண்டவரே உங்களுக்கு விரோதமாகச் சாட்சியாக இருப்பார்.

3 இதோ, யெகோவா தம்முடைய இடத்திலிருந்து புறப்பட்டு வருகிறார்; அவர் இறங்கி பூமியின் உயர்ந்த இடங்களை மிதிப்பார்.

4 மெழுகு நெருப்பிற்கு முன்பாக உருகுகிறதுபோலவும், மலைகளிலிருந்து பாயும்தண்ணீர் தரையைப் பிளக்கிறதுபோலவும், மலைகள் அவர் கீழே உருகி, பள்ளத்தாக்குகள் பிளந்துபோகும்.

5 இவை அனைத்தும் யாக்கோபுடைய மீறுதலின் காரணமாகவும், இஸ்ரவேல் வம்சத்தார்களுடைய பாவங்களின் காரணமாகவும் சம்பவிக்கும்; யாக்கோபின் மீறுதலுக்குக் காரணமென்ன? சமாரியா அல்லவோ? யூதாவின் மேடைகளுக்குக் காரணமென்ன? எருசலேம் அல்லவோ?

6 ஆகையால் நான் சமாரியாவை வெளியான மண்மேடும், திராட்சைச்செடி நடுகிற நிலமுமாக்கி, அதின் கற்களைப் பள்ளத்தாக்கிலே புரண்டுவிழச்செய்து, அதின் அஸ்திபாரங்களைத் திறந்துவைப்பேன்.

7 அதின் வார்ப்பிக்கப்பட்ட சிலைகள் அனைத்தும் நொறுக்கப்படும்; அதின் பொருட்கள் அனைத்தும் நெருப்பினால் எரித்துப்போடப்படும்; அதின் சிலைகளை எல்லாம் பாழாக்குவேன்; வேசிப்பணையத்தினால் சேர்க்கப்பட்டது, திரும்ப வேசிப்பணையமாகச் செலுத்தப்படும்.


இஸ்ரவேல் மற்றும் யூதாவுக்காகப் புலம்புதல்

8 இதனால் நான் புலம்பி அலறுவேன்; பறிகொடுத்தவனாகவும் நிர்வாணமாகவும் நடப்பேன்; நான் நரிகளைப்போல ஊளையிட்டு, ஆந்தைகளைப்போல அலறுவேன்.

9 அதின் காயம் ஆறாதது; அது யூதாவரை வந்தது: என் மக்களின் வாசலாகிய எருசலேம்வரை வந்து சேர்ந்தது.

10 அதைக் காத்பட்டணத்திலே அறிவிக்காதீர்கள்; அழவே வேண்டாம்; பெத் அப்ராவிலே புழுதியில் புரளு.

11 சாப்பீரில் குடியிருக்கிறவளே, வெட்கத்துடன் நிர்வாணமாக அப்பாலே போ; சாயனானில் குடியிருக்கிறவன் வெளியே வருவதில்லை; பெத் ஏசேலின் புலம்பல் உங்களுக்கு அடைக்கலமாக இருக்காது.

12 மாரோத்தில் குடியிருக்கிறவள் நன்மை வருமென்று எதிர்பார்த்திருந்தாள்; ஆனாலும் தீமை யெகோவாவிடத்திலிருந்து எருசலேமின் வாசல்வரைக்கும் வந்தது.

13 லாகீசில் குடியிருக்கிறவளே, வேகமான குதிரைகளை இரதத்திலே பூட்டு; நீயே மகளாகிய சீயோனின் பாவத்திற்குக் காரணம்; உன்னிடத்தில் இஸ்ரவேலின் கீழ்ப்படியாமைகள் காணப்பட்டது.

14 ஆகையால் மோர்ஷேத்காத்தினிடத்தில் உனக்கு இருக்கிறதைக் கொடுத்துவிடுவாய்; அக்சீபின் வீடுகள் இஸ்ரவேலின் ராஜாக்களுக்கு ஏமாற்றமாகப்போகும்.

15 மரேஷாவில் குடியிருக்கிறவளே, உனக்கு இன்னும் ஒரு உரிமையாளனை வரச்செய்வேன்; இஸ்ரவேலின் தலைவர்கள் அதுல்லாம் வரை வருவார்கள்.

16 உனக்கு அருமையான உன் பிள்ளைகளுக்காக நீ உன் தலையைச் சிரைத்து மொட்டையிட்டுக்கொள்; கழுகைப்போல முழுமொட்டையாயிரு, அவர்கள் உன்னைவிட்டுச் சிறைப்பட்டுப் போகிறார்கள்.

TAM-IRV

Creative Commons License

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.

Bridge Connectivity Solutions Pvt. Ltd.
Následuj nás:



Reklamy