Online Bible

- Reklamy -

யோவேல் 1 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்


அத்தியாயம் 1 யோவேலுக்கு கொடுக்கப்பட்ட யெகோவாவுடைய வசனம்

1 பெத்துவேலின் மகனாகிய யோவேலுக்கு கொடுக்கப்பட்ட யெகோவாவுடைய வசனம்.

2 முதியோர்களே, இதைக் கேளுங்கள்; தேசத்தின் அனைத்துக் குடிமக்களே, செவிகொடுங்கள்; உங்கள் நாட்களிலாவது உங்கள் முன்னோர்களின் நாட்களிலாவது இப்படிப்பட்டது சம்பவித்ததுண்டா?

3 இந்தச் செய்தியை உங்கள் பிள்ளைகளுக்குத் தெரிவியுங்கள்; இதை உங்களுடைய பிள்ளைகள் தங்கள் பிள்ளைகளுக்கும், அவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கும் சந்ததியாருக்கும் தெரிவிப்பார்களாக.

4 பச்சைப்புழு விட்டதை வெட்டுக்கிளி தின்றது; வெட்டுக்கிளி விட்டதைப் பச்சைக்கிளி தின்றது; பச்சைக்கிளி விட்டதை முசுக்கட்டைப்பூச்சி தின்றது.

5 மது வெறியர்களே, விழித்து அழுங்கள்; திராட்சைரசம் குடிக்கிற அனைத்து மக்களே, புது திராட்சைரசத்திற்காக அலறுங்கள்; அது உங்கள் வாயிலிருந்து அகற்றப்பட்டது.

6 எண்ணிமுடியாத ஒரு பெரும் மக்கள்கூட்டம் என் தேசத்தின்மேல் வருகிறது; அதின் பற்கள் சிங்கத்தின் பற்கள்; கொடிய சிங்கத்தின் கடைவாய்ப்பற்கள் அதற்கு உண்டு.

7 அது என் திராட்சைச்செடியை அழித்து, என் அத்திமரத்தை உரித்து, அதின் பட்டையை முழுவதும் தின்றுபோட்டது; அதின் கிளைகள் வெண்மையாயிற்று.

8 தன் இளவயதின் கணவனுக்காக சணல் ஆடையை அணிந்திருக்கிற பெண்ணைப்போலப் புலம்பும்.

9 உணவுபலியும் பானபலியும் யெகோவாவுடைய ஆலயத்தை விட்டு அகன்றுபோனது; யெகோவாவின் ஊழியக்காரர்களாகிய ஆசாரியர்கள் துக்கப்படுகிறார்கள்.

10 வயல்வெளி பாழானது, பூமி துக்கம் கொண்டாடுகிறது; விளைச்சல் அழிக்கப்பட்டது; புது திராட்சைரசம் வற்றிப்போனது; எண்ணெய் தீர்ந்துபோனது.

11 பயிரிடும் குடிமக்களே, வெட்கப்படுங்கள்; கோதுமையும், வாற்கோதுமையும் இல்லாமற்போனது; திராட்சைத்தோட்டக்காரர்களே, அலறுங்கள்; வயல்வெளியின் அறுப்பு அழிந்துபோனது.

12 திராட்சைச்செடி வதங்கி, அத்திமரம் சாரமற்றுப்போகிறது; மாதுளை, பேரீச்சம், கிச்சிலி முதலிய தோட்டத்தின் செடிகள் எல்லாம் வாடிப்போனது; சந்தோஷம் மனுக்குலத்தைவிட்டு ஒழிந்துபோனது.


தேசத்திற்காகப் புலம்புதல்

13 ஆசாரியர்களே, சணல் ஆடையை அணிந்து புலம்புங்கள்; பலிபீடத்தின் பணிவிடைக்காரர்களே, அலறுங்கள்; என் தேவனுடைய ஊழியக்காரர்களே, நீங்கள் உள்ளே நுழைந்து சணல் ஆடையை அணிந்தவர்களாக இரவு தங்குங்கள். உங்கள் தேவனுடைய ஆலயத்தில் உணவுபலியும் பானபலியும் செலுத்தப்படாமல் நிறுத்தப்பட்டது.

14 பரிசுத்த உபவாசநாளை ஏற்படுத்துங்கள்; விசேஷித்த ஆசரிப்பை அறிவியுங்கள்; மூப்பர்களையும் தேசத்தின் எல்லா குடிமக்களையும், உங்கள் தேவனாகிய யெகோவாவின் ஆலயத்திலே கூடிவரச்செய்து யெகோவாவை நோக்கிக் கூப்பிடுங்கள்.

15 அந்த பயங்கரமான நாளுக்காக ஐயோ, யெகோவாவுடைய நியயதீர்ப்பின் நாள், சமீபமாயிருக்கிறது; அது அழிவைப்போல சர்வ வல்ல தேவனிடத்திலிருந்து வருகிறது.

16 நம்முடைய கண்களைவிட்டு ஆகாரமும், நம்முடைய தேவனின் ஆலயத்தைவிட்டுச் சந்தோஷமும் மகிழ்ச்சியும் நீக்கப்படவில்லையோ?

17 விதையானது மண்கட்டிகளின் கீழ் மக்கிப்போனது; பயிர் காய்ந்துபோகிறதினால் கிடங்குகள் பாழாகிக் களஞ்சியங்கள் இடிந்துபோனது.

18 மிருகங்கள் எவ்வளவாகத் தவிக்கிறது; மாட்டுமந்தைகள் தங்களுக்கு மேய்ச்சல் இல்லாததினால் கலங்குகிறது; ஆட்டுமந்தைகளும் சேதமானது.

19 யெகோவாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; நெருப்பு வனாந்திரத்தின் மேய்ச்சல்களை அழித்தது, நெருப்புத்தழல் தோட்டத்தின் மரங்களையெல்லாம் எரித்துப்போடுகிறது.

20 வெளியின் மிருகங்களும் உம்மை நோக்கிக் கதறுகிறது; நதிகளில் தண்ணீரெல்லாம் வற்றிப்போனது; நெருப்பு வனாந்திரத்தின் மேய்ச்சல்களை அழித்துப்போட்டது.

TAM-IRV

Creative Commons License

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.

Bridge Connectivity Solutions Pvt. Ltd.
Následuj nás:



Reklamy