Online Bible

- Reklamy -

ஏசாயா 26 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்


அத்தியாயம் 26 துதிப்பாடல்

1 அக்காலத்திலே யூதாதேசத்தில் பாடப்படும் பாட்டாவது: பெலனான நகரம் நமக்கு உண்டு; காப்பாற்றுதலையே அதற்கு மதிலும் பாதுகாப்புமாக ஏற்படுத்துவார்.

2 சத்தியத்தைக் கைக்கொண்டுவருகிற நீதியுள்ள தேசம் உள்ளே நுழைவதற்காக வாசல்களைத் திறவுங்கள்.

3 உம்மை உறுதியாகப் பற்றிக்கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறதினால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர்.

4 யெகோவாவை என்றென்றைக்கும் நம்புங்கள்; கர்த்தராகிய யேகோவா நிலையான கன்மலையாயிருக்கிறார்.

5 அவர் உயரத்திலே வாசமாயிருக்கிறவர்களையும் கீழே தள்ளுகிறார்; உயர்ந்த நகரத்தையும் தாழ்த்துகிறார்; அவர் தரைவரை தாழ்த்தி அது மண்ணாகும்வரை இடியச்செய்வார்.

6 கால் அதை மிதிக்கும், சிறுமையானவர்களின் காலும் எளிமையானவர்களின் அடிகளுமே அதை மிதிக்கும்.

7 நீதிமானுடைய பாதை செம்மையாயிருக்கிறது; மகா நீதிபரராகிய நீர் நீதிமானுடைய பாதையைச் செம்மைப்படுத்துகிறீர்.

8 யெகோவாவே, உம்முடைய நியாயத்தீர்ப்புகளின் வழியிலே உமக்குக் காத்திருக்கிறோம்; உமது பெயரும், உம்மை நினைக்கும் நினைவும் எங்கள் ஆத்தும வாஞ்சையாயிருக்கிறது.

9 என் ஆத்துமா இரவிலே உம்மை வாஞ்சிக்கிறது; எனக்குள் இருக்கிற என் ஆவியால் அதிகாலையிலும் உம்மைத் தேடுகிறேன்; உம்முடைய நியாயத்தீர்ப்புகள் பூமியிலே நடக்கும்போது பூமியிலுள்ள மக்கள் நீதியைக் கற்றுக்கொள்வார்கள்.

10 துன்மார்க்கனுக்குத் தயைசெய்தாலும் நீதியைக் கற்றுக்கொள்ளமாட்டான்; நீதியுள்ள தேசத்திலும் அவன் அநியாயஞ்செய்து யெகோவாவுடைய மகத்துவத்தைக் கவனிக்காமல்போகிறான்.

11 யெகோவாவே, உமது கை ஓங்கியிருக்கிறது; அவர்கள் அதைக் காணாதிருக்கிறார்கள்; ஆனாலும் உமது மக்களுக்காக நீர் வைத்திருக்கும் வைராக்கியத்தைக்கண்டு வெட்கப்படுவார்கள்; அக்கினி உம்முடைய எதிரிகளை எரிக்கும்.

12 யெகோவாவே, எங்களுக்குச் சமாதானத்தைக் கட்டளையிடுவீர்; எங்கள் செயல்களையெல்லாம் எங்களுக்காக நடத்திவருகிறவர் நீரே.

13 எங்கள் தேவனாகிய யெகோவாவே, உம்மையல்லாமல் வேறே ஆண்டவன்மார் எங்களை ஆண்டார்கள்; இனி உம்மை மாத்திரம் சார்ந்து உம்முடைய நாமத்தைப் பிரஸ்தாபப்படுத்துவோம்.

14 அவர்கள் இறந்தவர்கள், உயிரடையமாட்டார்கள்; இறந்த இராட்சதர் திரும்ப எழுந்திருக்கமாட்டார்கள்; நீர் அவர்களை விசாரித்து அழித்து, அவர்கள் பெயரையும் அழியச்செய்தீர்.

15 இந்த தேசத்தைப் பெருகச்செய்தீர்; யெகோவாவே, இந்த தேசத்தைப் பெருகச்செய்தீர்; நீர் மகிமைப்பட்டீர், தேசத்தின் எல்லை எல்லாவற்றையும் அதிக தூரத்தில் தள்ளிவைத்தீர்.

16 யெகோவாவே, நெருக்கத்தில் உம்மைத் தேடினார்கள்; உம்முடைய தண்டனை அவர்கள் மேலிருக்கும்போது உள்ளத்தில் வேண்டுதல் செய்தார்கள்.

17 யெகோவாவே, பிரசவநேரம் நெருங்கியிருக்கும்போது வேதனைப்பட்டு, தன் வேதனையில் கூப்பிடுகிற கர்ப்பவதியைப்போல, உமக்கு முன்பாக இருக்கிறோம்.

18 நாங்கள் கர்ப்பமாயிருந்து வேதனைப்பட்டு, காற்றைப் பெற்றவர்களைப்போல் இருக்கிறோம்; தேசத்தில் ஒரு பாதுகாப்பையும் செய்யமுடியாதிருக்கிறோம்; பூமியில் உள்ள மக்கள் விழுகிறதுமில்லை.

19 இறந்த உம்முடையவர்கள் பிரேதமான என்னுடையவர்களுடன் எழுந்திருப்பார்கள்; மண்ணிலே தங்கியிருக்கிறவர்களே, விழித்துக் கெம்பீரியுங்கள்; உம்முடைய பனி பயிர்களின்மேல் பெய்யும் பனிபோல் இருக்கும்; இறந்தவர்களைப் பூமி புறப்படச்செய்யும்.

20 என் மக்களே, நீ போய் உன் அறைகளுக்குள்ளே நுழைந்து, உன் கதவுகளைப் பூட்டிக்கொண்டு, கோபம் தணியும்வரை கொஞ்சநேரம் ஒளித்துக்கொள்.

21 இதோ, பூமியிலுள்ள மக்களின் அக்கிரமத்தின்காரணமாக அவர்களை விசாரிக்க யெகோவா தம்முடைய இடத்திலிருந்து புறப்பட்டுவருவார்; பூமி தன் இரத்தப்பழிகளை வெளிப்படுத்தி, தன்னிடத்தில் கொலை செய்யப்பட்டவர்களை இனி மூடாதிருக்கும்.

TAM-IRV

Creative Commons License

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.

Bridge Connectivity Solutions Pvt. Ltd.
Následuj nás:



Reklamy