யாத்திராகமம் 30 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்அத்தியாயம் 30 தூப பீடம், யாத்திரா 37:25-28. 1 “தூபங்காட்டுவதற்கு ஒரு தூபபீடத்தையும் சீத்திம் மரத்தால் உண்டாக்கவேண்டும். 2 அது ஒரு முழ நீளமும் ஒரு முழ அகலமுமான சதுரமும், இரண்டு முழ உயரமுமாக இருக்கவேண்டும், அதனுடைய கொம்புகள் அதனோடு ஒன்றாக இருக்கவேண்டும். 3 அதின் மேல்பக்கத்தையும் சுற்றுப்புறத்தையும் அதின் கொம்புகளையும் தகட்டால் மூடி, சுற்றிலும் அதற்குப் பொன்விளிம்பை உண்டாக்கி, 4 அந்த விளிம்பின்கீழே அதின் இரண்டு பக்கங்களிலும் அதைச் சுமக்கும் தண்டுகளின் இடங்களாகிய அதின் இரண்டு பக்கத்து இரண்டு மூலைகளிலும் இரண்டு பொன் வளையங்களை உண்டாக்கவேண்டும். 5 அந்தத் தண்டுகளையும் சீத்திம் மரத்தால் செய்து, அவைகளையும் பொன்தகட்டால் மூடவேண்டும். 6 சாட்சிப்பெட்டிக்கு முன்பாக இருக்கும் திரைச்சீலைக்கும், நான் உன்னைச் சந்திக்கும் இடமாகிய சாட்சி சந்நிதியின்மேலுள்ள கிருபாசனத்திற்கும் முன்பாக அதை வைக்கவேண்டும். 7 ஆரோன் காலைதோறும் அதின்மேல் நறுமண தூபம்காட்டவேண்டும்; மாலையில் விளக்கேற்றும்போதும் அதின்மேல் தூபம்காட்டவேண்டும்; விளக்குகளை விளக்கும்போதும் அதின்மேல் தூபம்காட்டவேண்டும். 8 உங்களுடைய தலைமுறைதோறும் யெகோவாவுடைய சந்நிதியில் காட்டவேண்டிய நிரந்தர தூபம் இதுவே. 9 அதின்மேல் அந்நிய தூபத்தையோ, தகனபலியையோ, ஆகாரபலியையோ படைக்கவேண்டாம்; அதின்மேல் பானபலியை ஊற்றவும் வேண்டாம். 10 வருடத்தில் ஒருமுறை ஆரோன் பாவநிவாரணபலியின் இரத்தத்தால் அதின் கொம்புகளின்மேல் பரிகாரம் செய்யவேண்டும்; உங்களுடைய தலைமுறைதோறும் வருடத்தில் ஒருமுறை அதின்மேல் பரிகாரம் செய்யவேண்டும்; அது யெகோவாவுக்கு மகா பரிசுத்தமானது என்றார். ஆசரிப்புக்கூடாரத்தின் திருப்பணிக்குக் பாவநிவர்த்திக்கான பணம் 11 பின்னும் யெகோவா மோசேயை நோக்கி: 12 “நீ இஸ்ரவேலர்களை அவர்கள் எண்ணிக்கையின்படி கணக்குப்பார்க்க, அவர்களை எண்ணும்போது, அவர்களுக்குள்ளே ஒரு வாதை உண்டாகாதபடி, அவர்களில் ஒவ்வொருவனும் எண்ணப்படும் நேரத்தில் தன்தன் ஆத்துமாவுக்காகக் யெகோவாவுக்கு மீட்கும் பொருளைக் கொடுக்கவேண்டும். 13 எண்ணப்படுகிறவர்களின் கணக்கிலே சேருகிற ஒவ்வொருவனும் பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல் கணக்கின்படி அரைச்சேக்கல் கொடுக்கவேண்டும்; ஒரு சேக்கலுக்கு இருபது கேரா; யெகோவாவுக்குச் செலுத்தப்படுவது அரைச்சேக்கல். 14 எண்ணப்படுகிறவர்களின் கணக்கிலே சேருகிற இருபது வயது முதற்கொண்டு அதற்கு மேற்பட்ட ஒவ்வொருவனும் அதைக் யெகோவாவுக்குச் செலுத்தவேண்டும். 15 உங்கள் ஆத்துமாக்களுக்காகப் பாவநிவிர்த்திசெய்யும்படி நீங்கள் யெகோவாவுக்குக் காணிக்கை செலுத்தும்போது, செல்வந்தன் அரைச்சேக்கலுக்கு அதிகமாகக் கொடுக்கவும் வேண்டாம், தரித்திரன் அதற்குக் குறைவாகக் கொடுக்கவும் வேண்டாம். 16 அந்த பாவநிவிர்த்தி பணத்தை நீ இஸ்ரவேலர்கள் கையில் வாங்கி, அதை ஆசரிப்புக்கூடாரத்தின் திருப்பணிக்குக் கொடுக்கவேண்டும்; அது யெகோவாவுடைய சந்நிதியில் உங்கள் ஆத்துமாக்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்வதற்கு, இஸ்ரவேலர்களுக்கு ஞாபகக்குறியாக இருக்கும் என்றார். கழுவும் வெண்கலத்து தொட்டி 17 பின்னும் யெகோவா மோசேயை நோக்கி: 18 “கழுவுவதற்கு வெண்கலத்தால் ஒரு தொட்டியையும், வெண்கலத்தால் அதின் பாதத்தையும் உண்டாக்கி, அதை ஆசரிப்புக்கூடாரத்திற்கும் பலிபீடத்திற்கும் நடுவே வைத்து, அதிலே தண்ணீர் ஊற்றவேண்டும். 19 அதனிடம் ஆரோனும் அவனுடைய மகன்களும் தங்களுடைய கைகளையும் தங்களுடைய கால்களையும் கழுவவேண்டும். 20 அவர்கள் ஆசரிப்புக்கூடாரத்திற்குள் நுழையும்போதும், யெகோவாவுக்குத் தகனத்தைக் கொளுத்தவும் பலிபீடத்தில் ஆராதனைசெய்ய சேரும்போதும், அவர்கள் சாகாதபடி தண்ணீரினால் தங்களைக் கழுவவேண்டும். 21 அவர்கள் சாகாதபடி தங்களுடைய கைகளையும் தங்களுடைய கால்களையும் கழுவவேண்டும்; இது தலைமுறைதோறும் அவனுக்கும் அவனுடைய சந்ததியார்களுக்கும் நிரந்தர கட்டளையாக இருக்கும் என்றார். அபிஷேக தைலம் 22 பின்னும் யெகோவா மோசேயை நோக்கி: 23 “மேன்மையான நறுமணப்பொருட்களாகிய சுத்தமான வெள்ளைப்போளத்தில் பரிசுத்த இடத்தின் சேக்கலின்படி ஐந்நூறு சேக்கல் எடையையும், நறுமணப்பட்டையிலே அதில் பாதியாகிய இருநூற்று ஐம்பது சேக்கல் எடையையும், சுகந்த வசம்பில் இருநூற்று ஐம்பது சேக்கல் எடையையும், 24 இலவங்கப்பட்டையில் ஐந்நூறு சேக்கல் எடையையும், ஒலிவ எண்ணெயில் ஒரு குடம் எண்ணெயையும் எடுத்து, 25 அதினால், பரிமளத்தைலக்காரன் செய்வதுபோல, கூட்டப்பட்ட பரிமளத்தைலமாகிய சுத்தமான அபிஷேக தைலத்தை உண்டாக்கு; அது பரிசுத்த அபிஷேக தைலமாக இருப்பதாக. 26 அதினாலே ஆசரிப்புக்கூடாரத்தையும், சாட்சிப்பெட்டியையும், 27 மேஜையையும், அதின் பணிப்பொருட்கள் எல்லாவற்றையும், குத்துவிளக்கையும், அதின் கருவிகளையும், தூப பீடத்தையும், 28 தகன பலிபீடத்தையும் அதின் பணிப்பொருட்கள் எல்லாவற்றையும், தொட்டியையும், அதின் பாதத்தையும் அபிஷேகம்செய்து, 29 அவைகள் மகா பரிசுத்தமாக இருக்கும்படி, அவைகளைப் பரிசுத்தப்படுத்தவேண்டும்; அவைகளைத் தொடுகிறதெல்லாம் பரிசுத்தமாக இருக்கும். 30 ஆரோனும் அவனுடைய மகன்களும் எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படி, நீ அவர்களை அபிஷேகம்செய்து, அவர்களைப் பரிசுத்தப்படுத்தவேண்டும். 31 இஸ்ரவேலர்களுடன் நீ பேசிச் சொல்லவேண்டியது: உங்களுடைய தலைமுறைதோறும் இது எனக்குரிய பரிசுத்த அபிஷேகத் தைலமாக இருக்கவேண்டும். 32 இது மனிதர்களுடைய சரீரத்தின்மேல் ஊற்றப்படக்கூடாது; இது செய்யப்பட்ட முறையின்படி அவர்கள் வேறொரு தைலத்தைச் செய்யவும்கூடாது; இது பரிசுத்தமானது, இது உங்களுக்குப் பரிசுத்தமாக இருக்கும். 33 இந்த முறையின்படியே தைலங்கூட்டுகிறவனும், அதில் எடுத்து அந்நியன்மேல் ஊற்றுகிறவனும், தன்னுடைய மக்களில் இராதபடி அறுப்புண்டுபோகவேண்டும் என்று சொல் என்றார். தூபம் 34 “பின்னும் யெகோவா மோசேயை நோக்கி: சுத்த வெள்ளைப்போளமும் குங்கிலியமும் அல்பான் பிசினுமாகிய கந்தவர்க்கங்களையும் சுத்தமான சாம்பிராணியையும் நீ சமஎடையாக எடுத்து, 35 தைலக்காரன் செய்கிறதுபோல அதற்குப் பரிமளமேற்றி, தூய்மையான பரிசுத்த தூபவர்க்கமாக்கி, 36 அதில் கொஞ்சம் எடுத்துப் பொடியாக இடித்து, நான் உன்னைச் சந்திக்கும் ஆசரிப்புக்கூடாரத்திலிருக்கும் சாட்சி சந்நிதியில் வைக்கவேண்டும்; அது உங்களுக்கு மகா பரிசுத்தமாக இருக்கவேண்டும். 37 இந்தத் தூபவர்க்கத்தை நீ செய்யவேண்டிய முறையின்படி உங்களுக்காகச் செய்துகொள்ளக்கூடாது; இது யேகோவாக்கென்று உனக்குப் பரிசுத்தமாக இருக்கவேண்டும். 38 இதற்கு ஒப்பானதை முகருகிறதற்காகச் செய்கிறவன் தன்னுடைய மக்களில் இல்லாதபடி துண்டிக்கப்படவேண்டும் என்றார். |
TAM-IRV
Creative Commons License
Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Bridge Connectivity Solutions Pvt. Ltd.