2 சாமு 5 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்அத்தியாயம் 5 தாவீது இஸ்ரவேலின் ராஜாவாக அபிஷேகம் செய்யப்படுதல் 1 அந்தக்காலத்திலே இஸ்ரவேலின் கோத்திரங்களெல்லாம் எப்ரோனில் இருக்கிற தாவீதிடம் வந்து: இதோ, நாங்கள் உம்முடைய எலும்பும் உம்முடைய சதையுமானவர்கள். 2 சவுல் எங்கள்மேல் ராஜாவாக இருக்கும்போதே இஸ்ரவேலை நடத்திக்கொண்டுபோனவரும், நடத்திக்கொண்டுவந்தவரும் நீரே; யெகோவா: என்னுடைய மக்களான இஸ்ரவேலை நீ மேய்த்து, நீ இஸ்ரவேலின்மேல் தலைவனாக இருப்பாய் என்று உம்மிடத்தில் சொன்னாரே என்றார்கள். 3 இஸ்ரவேலின் மூப்பர்கள் எல்லோரும் எப்ரோனிலே ராஜாவிடம் வந்தார்கள்; தாவீது ராஜா எப்ரோனிலே யெகோவாவுக்கு முன்பாக அவர்களோடு உடன்படிக்கைசெய்தபின்பு, அவர்கள் தாவீதை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம்செய்தார்கள். 4 தாவீது ராஜாவாகும்போது, 30 வயதாக இருந்தான்; அவன் 40 வருடங்கள் ஆட்சி செய்தான். 5 அவன் எப்ரோனிலே யூதாவை ஏழு வருடங்களும் ஆறு மாதங்களும், எருசலேமிலே இஸ்ரவேல் முழுவதும் யூதாவையும் 33 வருடங்களும் ஆட்சிசெய்தான். தாவீது எருசலேமைக் கைப்பற்றுதல் 6 தேசத்திலே குடியிருக்கிற எபூசியர்கள்மேல் யுத்தம்செய்ய ராஜா தன்னுடைய மனிதர்களோடு எருசலேமுக்குப் போனான். அவர்கள்: இதிலே தாவீதால் நுழையமுடியாது என்று நினைத்து, தாவீதை நோக்கி: நீ இதற்குள் நுழையமுடியாது; குருடர்களும் சப்பாணிகளும் உன்னைத் தடுப்பார்கள் என்று சொன்னார்கள். 7 ஆனாலும் தாவீது சீயோன் கோட்டையைப் பிடித்தான்; அது தாவீதின் நகரமானது. 8 எவன் கழிவுநீர்க்கால்வாய் வழியாக ஏறி, எபூசியர்களையும் தாவீதின் எதிரிகளான சப்பாணிகளையும், குருடர்களையும் முறியடிக்கிறானோ, அவன் தலைவனாக இருப்பான் என்று தாவீது அன்றையதினம் சொல்லியிருந்தான்; அதனால் குருடனும் சப்பாணியும்; யெகோவாவின் வீட்டிற்குள் வரக்கூடாது என்று சொல்வதுண்டு. 9 அந்தக் கோட்டையிலே தாவீது வாழ்ந்து, அதற்குத் தாவீதின் நகரம் என்று பெயரிட்டு, மில்லோ என்னும் இடம் துவங்கி, உட்புறம்வரை சுற்றிலும் மதிலைக் கட்டினான். 10 தாவீது நாளுக்குநாள் அதிக பெலமடைந்தான்; ஏனென்றால், சேனைகளின் தேவனாகிய யெகோவா அவனோடு இருந்தார். 11 தீருவின் ராஜாவான ஈராம் தாவீதிடம் தூதுவர்களையும், கேதுரு மரங்களையும், தச்சர்களையும், கொத்தனார்களையும் அனுப்பினான்; அவர்கள் தாவீதுக்கு ஒரு வீட்டைக் கட்டினார்கள். 12 யெகோவா தன்னை இஸ்ரவேலின்மேல் ராஜாவாகப் பெலப்படுத்தி, தம்முடைய மக்களான இஸ்ரவேலுக்காக தன்னுடைய ராஜ்ஜியத்தை உயர்த்தினார் என்று தாவீது தெளிவாக அறிந்தபோது. 13 அவன் எப்ரோனிலிருந்து வந்த பின்பு, எருசலேமில் இன்னும் அதிகமான மறுமனையாட்டிகளையும் பெண்களையும் திருமணம் செய்துகொண்டான்; இன்னும் அதிக மகன்களும், மகள்களும் தாவீதுக்குப் பிறந்தார்கள். 14 எருசலேமில் அவனுக்குச் சம்முவா, சோபாப், நாத்தான், சாலொமோன், 15 இப்பார், எலிசூவா, நெப்பேக், யப்பியா, 16 எலிஷாமா, எலியாதா, எலிப்பேலேத் என்ற பெயர்களை உடைய மகன்கள் பிறந்தார்கள். தாவீது பெலிஸ்தர்களைத் தோற்கடித்தல் 17 தாவீதை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம்செய்தார்கள் என்று பெலிஸ்தர்கள் கேள்விப்பட்டபோது, அவர்கள் எல்லோரும் தாவீதைத் தேடும்படி வந்தார்கள்; அதைத் தாவீது கேட்டபோது, ஒரு கோட்டைக்குள் போனான். 18 பெலிஸ்தர்களோ வந்து, ரெப்பாயீம் பள்ளத்தாக்கிலே பரவியிருந்தார்கள். 19 பெலிஸ்தர்களுக்கு எதிராகப் போகலாமா, அவர்களை என்னுடைய கையிலே ஒப்புக்கொடுப்பீரா என்று தாவீது கர்த்தரிடம் விசாரித்தபோது, யெகோவா: போ, பெலிஸ்தர்களை உன்னுடைய கையில் நிச்சயமாக ஒப்புக்கொடுப்பேன் என்று தாவீதுக்குச் சொன்னார். 20 தாவீது பாகால்பிராசீமிற்கு வந்து, அங்கே அவர்களை முறியடித்து: தண்ணீர்கள் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறதுபோல, யெகோவ என்னுடைய எதிரிகளை எனக்கு முன்பாக சிதறடித்தார் என்று சொல்லி, அதினால் அந்த இடத்திற்குப் பாகால்பிராசீம் என்று பெயரிட்டான். 21 அங்கே பெலிஸ்தர்கள் தங்களுடைய விக்கிரகங்களைவிட்டு ஓடிப்போனார்கள்; அவைகளைத் தாவீதும் அவனுடைய மனிதர்களும் எடுத்துக்கொண்டுபோனார்கள். 22 பெலிஸ்தர்கள் திரும்பவும் வந்து, ரெப்பாயீம் பள்ளத்தாக்கிலே இறங்கினார்கள். 23 தாவீது யெகோவாவிடம் விசாரித்ததற்கு, அவர்: நீ நேராகப் போகாமல், அவர்களுக்குப் பின்னாலே சுற்றி, முசுக்கட்டைச் செடிகளுக்கு எதிராக இருந்து, அவர்கள்மேல் பாய்ந்து, 24 முசுக்கட்டைச் செடிகளின் நுனிகளிலே செல்லுகிற சத்தத்தை நீ கேட்கும்போது, சீக்கிரமாக எழுந்துப்போ; அப்பொழுது பெலிஸ்தர்களின் முகாமை முறியடிக்க, யெகோவா உனக்கு முன்பாகப் புறப்பட்டிருப்பார் என்றார். 25 யெகோவா தாவீதுக்குக் கட்டளையிட்டபடி அவன் செய்து, பெலிஸ்தர்களைக் கேபா துவங்கிக் கேசேர் எல்லைவரை முறியடித்தான். |
TAM-IRV
Creative Commons License
Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Bridge Connectivity Solutions Pvt. Ltd.