Aanlyn Bybel

- Advertensies -

1 தீமோ 1 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

1 நமது மீட்பராகிய இறைவனும், நமது நல்ல எதிர்பார்ப்பின் காரணரான கிறிஸ்து இயேசுவும் கட்டளையிட்டபடி கிறிஸ்து இயேசுவுக்கு அப்போஸ்தலனாய் இருக்கின்ற பவுல்,

2 விசுவாசத்தில் எனக்கு உண்மையான பிள்ளையாக இருக்கின்ற தீமோத்தேயுவுக்கு எழுதுகின்றதாவது: பிதாவாகிய இறைவனிடமிருந்தும், நமது ஆண்டவர் கிறிஸ்து இயேசுவிடமிருந்தும் கிருபையும் இரக்கமும் சமாதானமும் கிடைப்பதாக.


தவறாகப் போதிக்கும் நீதிச்சட்ட ஆசிரியர்கள்

3 நான் மக்கெதோனியாவுக்குப் போனபோது உன்னிடம் வற்புறுத்தி வேண்டிக்கொண்டது போல, நீ எபேசுவிலே தங்கியிருந்தவாறு உண்மைக்குப் புறம்பான கோட்பாடுகளைக் கற்றுக் கொடுக்காதபடி அங்கே உள்ள சிலருக்கு கட்டளையிடு.

4 கட்டுக்கதைகளிலும், முடிவில்லாத வம்ச வரலாறுகளிலும் ஈடுபடுவதைவிட்டு விடும்படி அவர்களுக்குக் கட்டளையிடு. இவை வாக்குவாதங்களுக்கு வழிவகுக்குமே அல்லாமல், விசுவாசத்தினால் நடைபெறும் இறைவனின் திட்டத்தை முன்கொண்டு நடத்த வழிவகுக்காது.

5 அன்பே இந்தக் கட்டளையின் நோக்கம். அந்த அன்பானது தூய்மையான இருதயத்திலிருந்தும், நல்ல மனசாட்சியிலிருந்தும், உண்மையான விசுவாசத்திலிருந்துமே வெளிவருகின்றது.

6 சிலர் இவற்றைவிட்டு விலகி வீண் பேச்சில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

7 அவர்கள் நீதிச்சட்ட ஆசிரியர்களாய் இருக்க விரும்புகிறார்கள். ஆனால் தாங்கள் எதைப் பற்றிப் பேசுகின்றோம் என்பதையும் தாங்கள் நிச்சயத்தோடு வலியுறுத்துவது என்னவென்றும் அறியாமல் இருக்கின்றார்கள்.

8 நீதிச்சட்டம் நல்லது என்பதை நாம் அறிவோம். ஆனால் அதை ஒருவன் முறைப்படி பயன்படுத்த வேண்டும்.

9 நீதிச்சட்டம் நீதிமான்களுக்காக இயற்றப்படவில்லை. சட்டத்தை மீறுபவர்கள், கலகக்காரர்கள், இறைவனை மறுதலிப்பவர்கள், பாவிகள், பரிசுத்தம் இல்லாதவர்கள், நம்பிக்கை இல்லாதவர்கள், தங்கள் தந்தையை தாயைக் கொலை செய்பவர்கள், கொலைகாரர்கள்,

10 தகாத உறவில் ஈடுபடுகின்றவர்கள், ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுகின்றவர்கள், அடிமை வியாபாரம் செய்கின்றவர்கள், பொய் பேசுகின்றவர்கள், பொய்ச் சத்தியம் செய்கின்றவர்கள் ஆகிய இவர்களுக்காகவும், நலமான கோட்பாட்டிற்கு எதிரான அனைத்து செயல்களுக்காகவுமே இயற்றப்பட்டிருக்கிறது.

11 இந்த நலமான கோட்பாடானது, புகழ்ச்சிக்குரிய இறைவன் என்னிடம் ஒப்படைத்துள்ள மகிமையான நற்செய்திக்கு ஒத்ததாக இருக்கின்றது.


பவுலுக்கு கர்த்தரின் கிருபை

12 என்னைப் பலப்படுத்திய எனது ஆண்டவர் கிறிஸ்து இயேசுவுக்கு நான் நன்றி செலுத்துகிறேன். ஏனெனில் அவர் என்னை உண்மையுள்ளவன் என்று கருதி, அவரது பணியில் என்னை நியமித்தார்.

13 முன்னொரு காலத்தில் நான் அவரை நிந்திக்கின்றவனாகவும், துன்புறுத்துகின்றவனாகவும், வன்முறைக்காரனாகவும் இருந்தேன். ஆனாலும் எனக்கு இரக்கம் காட்டப்பட்டது. ஏனெனில் எனது அறியாமையினாலும் அவிசுவாசத்தினாலுமே நான் அப்படி நடந்துகொண்டேன்.

14 நமது கர்த்தரின் கிருபை கிறிஸ்து இயேசுவின் மீதுள்ள விசுவாசத்தோடும், அன்புடனும் சேர்த்து என்மீது நிறைவாக ஊற்றப்பட்டது.

15 நம்பத்தகுந்ததும், முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியதுமான கூற்று இது: பாவிகளை மீட்பதற்காகவே கிறிஸ்து இயேசு உலகத்திற்கு வந்தார். அந்தப் பாவிகளில் மிக மோசமான பாவி நானே.

16 ஆனாலும், என்மீது இரக்கம் காட்டப்பட்டது. ஏனெனில் நித்திய வாழ்வைப் பெறுவதற்கு கிறிஸ்து இயேசுவில் விசுவாசம் வைக்கப் போகின்றவர்களுக்கு, நான் ஓர் எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் என்ற காரணத்திற்காகவே மிக மோசமான பாவியாகிய என்மீது அவர் அளவற்ற பொறுமையைக் காண்பித்தார்.

17 நித்திய அரசரும், அழிவில்லாதவரும், கண்ணுக்குப் புலப்படாதவருமான ஒரேயொருவரான இறைவனுக்கே கனம், மகிமை என்பன என்றென்றும் உரித்தாகட்டும். ஆமென்.


தீமோத்தேயுவின் பொறுப்பு புதுப்பிக்கப்படல்

18 மகன் தீமோத்தேயு, முன்பு உன்னைப்பற்றிக் கூறப்பட்ட இறைவாக்கின்படியே நான் உனக்கு இந்த அறிவுறுத்தலைக் கொடுக்கின்றேன். இவற்றை நீ கைக்கொள்வதனால், நல்ல போராட்டத்தையும்,

19 விசுவாசத்தையும், நல்ல மனசாட்சியையும் பற்றிப்பிடித்துக் கொண்டு உறுதியுடன் போராடுவாய். சிலர் இவற்றை நிராகரித்ததால், பாறையில் மோதிய கப்பலைப் போல் தங்கள் விசுவாசத்தை அழித்துவிட்டார்கள்.

20 இமெநேயும், அலெக்சாந்தரும் அப்படிப்பட்டவர்களாய் இருக்கின்றார்கள். அவர்களை நான் சாத்தானிடம் கையளித்திருக்கிறேன். இறைவனைப்பற்றி நிந்தித்து பேசாதிருக்க அவர்கள் கற்றுக்கொள்ளட்டும்.

இலகு தமிழ் மொழிபெயர்ப்பு™ புதிய ஏற்பாடு

பதிப்புரிமை © 2002, 2022 Biblica, Inc.

அனுமதியுடன் பயன்படுத்தப்பட்டுள்ளது.

உலகளாவிய ரீதியில் முழு பதிப்புரிமையும் பாதுகாக்கப்பட்டவை.

Tamil Readerʼs Version™ New Testament

Copyright © 2002, 2022 by Biblica, Inc.

Used with permission.

All rights reserved worldwide.

Biblica, Inc.
Volg ons:



Advertensies